வெளியேற்றலாம் என்றுப் பார்த்தால், செல்வமும் தப்பி விட வாய்ப்பு இருப்பதால், அவனை நெருங்கியப் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று முன்னேறிக் கொண்டு இருந்தான். ஆனால் செல்வமோ கிருத்திகா அருகில் சென்று அவளைப் பிடிக்கப் பார்த்தான்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த விளக்குக் கீழே விழுந்து அருகில் இருந்த துணி மூட்டையில் தீப்பிடித்தது. அப்படியே அருகில் இருந்த மின்சார வயர்களில் தீப்பரவ, மொத்த இடமும் பற்றி எரிய ஆரம்பித்தது.
அதைக் கண்டு திடுக்கிட்ட ப்ரித்வி , கிருத்தியை நோக்கி வேகமாக வந்து அவளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். சிறு கோவில் தான் என்பதால் உள்ளே இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு வெளியே வர , செல்வம் உள் பகுதியில் மாட்டிக் கொண்டான்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தாலும், குன்றின் மேல் ஏற முடியாமல் மாட்டிக் கொண்டனர். தீயில் இருந்து தப்பித்த பொது மக்கள் இறங்கிக் கொண்டு இருந்ததால், அவர்களை எதிர் கொண்டு தீயணைப்பு வாகனம் செல்ல இயலவில்லை.
ப்ரித்வி பாதுகாப்பான தூரத்தில் கிருத்தியை நிற்க வைத்து விட்டு , உள்ளே செல்ல முயற்சிக்க கிருத்திகா அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள். ப்ரித்வி என்னவேன்றுப் பார்க்க, கிருத்தியின் கண்களில் தெரிந்த கனலில் திடுக்கிட்டான்.
ஆனால் அடுத்தக் கணமே அவன் கண்களிலும் மெல்லிய கனல் வீசத் துவங்கியது. இருவர் எண்ணங்களும் கிரண் தேவி நோக்கிச் சென்று இருக்க, உள்ளே கரணி மாதா இருந்த இடத்தில் கிரண் தேவியின் உருவம் இவர்கள் இருவர் கண்களுக்கும் தெரிந்தது.
கிரண் தேவியின் கண்கள் அந்தச் செல்வம் சுற்றி இருக்கும் தீயின் வெப்பம் தாங்கமால் அங்கும் இங்கும் அலைவதைக் கண்டு ரசித்தது. மற்றொரு புறம் இளவரசனின் முகமோ புன்னகையோடு பார்த்துக் கொண்டு இருந்தது.
அந்த நேரத்தில் ப்ரிதிவிக்கும், கிருத்திக்கும்,
“பெண்களை போகப் பொருளாக எண்ணும் ஆண்களை அழிக்காமல் விட மாட்டேன். என் மக்களை , குறிப்பாகப் பெண்களை அபகரிக்க நினைக்கும் ஆண்களிடமிருந்துக் காப்பாற்ற ஏதோ ஒரு ரூபத்தில் என்னுள் எரியும் இந்த நெருப்பானது அவர்களை எரித்து சாம்பலாக்கும்.”
என்னும் கிரண் தேவியின் சபதம் செய்தக் குரல் அசரீரியாக கேட்டது. எத்தனையோ பெண்களுக்கு ஊகிக்க முடியாத அளவில் பாதுகாவலாக இருந்துக் காக்கும் கிரண் தேவி, கிருத்திகாவிற்கு மட்டுமே உள்ளுணர்வாக நின்று இன்றைக்குக் காத்து நின்றாள்.
அதற்குள் தீயணைப்புத் துறையினர் மேலே வந்து தங்கள் பணியை ஆரம்பித்து இருந்தனர்.