உள்ளிருந்த பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்க, செல்வம் மட்டுமே தீயினில் பலியாகி இருந்தான்.
பின்னர் காவல்துறை வந்து அவர்களின் வழக்கப்படி முடித்து, கிருத்தி, ப்ரித்வி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இருவரும் தங்கள் காலேஜ் குழுவோடு வந்து சேர்ந்துக் கொண்டனர். அவர்களின் நல்ல நேரமாக அப்போதுதான் கிருத்தியைத் தேட ஆரம்பித்து இருக்க, அவள் வந்து விட்டாள்.
அவள் கழுத்தில் இருந்த பிளாஸ்டர் பற்றி எல்லோரும் கேட்க, இரும்புக் கம்பி ஒன்றுக் குத்தி விட்டதாக சமாளித்தாள். ப்ரித்விதான் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றதாகக் கூறவே, அதற்கு மேல் அதைத் துருவாமல் எல்லோரும் சென்று விட்டனர்.
மறுநாள் காலை ஆக்ரா சென்று விட்டு அன்று மாலை ஆக்ராவில் இருந்து ட்ரைன் புக் செய்து இருந்ததால், எல்லோரும் களைப்பில் உறங்கச் சென்று விட்டனர்.
ப்ரித்வியும், கிருத்தியும் மட்டும் அந்த ஹோட்டல் லாபியில் நின்றுக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சற்று நேரம் கழித்து அவள் புறம் திரும்பிய ப்ரித்வி,
“இப்போ ஹாப்பியா கிருத்தி” என்று வினவினான்.
“ஹாப்பியான்னு சொல்லத் தெரியல. ஆனால் ஒரு நிம்மதி இருக்கு” என்றாள்.
“ஹ்ம்ம். உங்க பெரியப்பாக் கிட்டப் பேசினியா?”
“பேசினேன்”
“என்ன சொன்னார்?”
“ப்ரித்விராஜ் நம்பித் தான் உன்னை அனுப்பினேன். அதை அவர் காப்பாத்திட்டார்ன்னு சொன்னாங்க”
“ஹ்ம்ம். இப்போ தான் ப்ரீயா இருக்கு.
“ஏன்?” என்று அவன் புறம் திரும்பி வினவ, அவளை நேராகப் பார்த்த ப்ரித்வி,
“செல்வத்தினால் உனக்கு ஏதும் ஆகிடுமோ என்று பயமாக இருந்தது” என்றான்.
“செல்வம் போன்ற எத்தனையோ பேரை நாம் சந்திக்கத் தானே வேண்டி இருக்கும்”
“உண்மைதான். எதிர்ப்புக் கிளம்பும் போது அநேகம் பேர் பயந்துப் பின் வாங்கி விடுவார்கள். ஆனால் இந்தச் செல்வம் போன்ற சில பேர் அதையே பழி வாங்க காரணமாக எடுக்கின்றனர். இது வரை நாம் சந்தித்ததில் செல்வத்தைப் போன்றவர்களைக் கையாள்வது மிகவும் சிரமம். அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்”
அவள் ஒப்புதலாகத் தலையாட்டவும்,