தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 19 - சித்ரா. வெ
நித்யா படிப்பை முழுதாக முடிக்க வேண்டும், அதன்பின் அவள் மேலே படிக்க விரும்பினாலும் படிக்க வைக்க வேண்டும், அவளை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களது தொழிலை பார்க்க பழக்க வேண்டுமென்றெல்லாம் கார்த்திக் மனதிற்குள் நினைத்திருந்தான். அதுவரை குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளி போடும் எண்ணம் அவனுக்கு இருந்தது.
அப்படியே இல்லையென்றாலும் அவள் படிப்பை முடிக்கும் வரையாவது குழந்தை பேறை தள்ளிப் போட நினைத்திருந்தான். முதலில் கார்த்திக்கிற்காக திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாலும், பின்னர் அதில் ஈடுபாடுடன் படித்த நித்யாவிற்குமே இப்போதைக்கு குழந்தை வேண்டாமென்ற எண்ணம் தான் இருந்தது.
அதனாலேயே இருவரும் இப்போதைக்கு குழந்தை வேண்டாமென்பதில் அதிக கவனமாக இருக்க, அவர்கள் எண்ணத்தையும், கட்டுப்பாடுகளையும் மீறி இப்போது நித்யா கருவுற்றிருக்க அதை கேள்விப்பட்ட கார்த்திக்கிற்கு குற்ற உணர்வாக இருந்தது.
ஆரம்பத்தில் அவளை விட்டு விலகி இருந்ததை அப்படியே தொடந்திருக்க வேண்டும், அதைவிடுத்து அவள் கூறினால் என்பதால் அவர்களின் தாம்பத்ய உறவை தொடர்ந்தது இப்போது எப்படிப்பட்ட சிக்கலை கொண்டு வந்துவிட்டது. நித்யாவை நினைத்துப் பார்க்கும்போது தந்தையாக போகும் மகிழ்ச்சியை கூட அவனால் முழுதாக அனுபவிக்க முடியவில்லை.
அதற்காக அந்த குழந்தை வேண்டாமென்று சொல்லவும் மனம் வரவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் குழப்பதில் அவன் இருக்க, வீட்டில் மற்றவர்களோ நித்யா கருவுற்ற செய்திக் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் பேரனின் முகம் கலக்கமாக இருப்பதை பார்த்து குறிஞ்சியம்மாள் கார்த்திக்கிடம் என்னவென்று கேட்க, அவனும் அவன் மனதில் இருக்கும் குழப்பத்தை அவரிடம் கூறினான்.
"இங்கப்பாரு கார்த்தி, கடவுள் நமக்கு எந்த நேரத்தில் எது கொடுக்கணும்னு நினைக்கிறாரோ, அதை கொடுப்பாரு. இந்த வயசுல உங்களுக்கு குழந்தை வேணும்னு அவர் முடிவு செய்து வச்சிருக்கார். அதுபடியே நடக்கிறது நடக்கட்டும்னு விட்டுடு. இப்போ அவளுக்கு ரெண்டு மாசம் தானே ஆகுது, இன்னும் 5 மாசத்துல அவளுக்கு காலேஜ் முடிஞ்சிடும், ஆனா குழந்தை பிறக்க நடுவில் 7 மாசம் இருக்குல்ல, அதுக்குள்ள அவ படிப்பு முடிஞ்சிட போகுது, அப்புறம் என்ன? வீணா பயம் தேவையில்லை கார்த்தி." என்று அவர் சமாதான வார்த்தைகள் கூற, இன்னும் மனது தெளியவில்லை என்றாலும், கார்த்திக் அரை மனதாய் தலையாட்டி வைத்தான்.
தன் மனக்கலக்கத்தை நித்யாவிடம் காட்டக் கூடாது என்று நினைத்தாலும் அவனது கலக்கம்