அவளுக்கும் புரிய தான் செய்தது. குறிஞ்சியம்மாள் சொன்னதை தான் அவளும் கூறினாள். "பாப்பா பொறக்கறதுக்குள்ள எப்படியோ என்னோட படிப்பு முடிஞ்சிடும், அதுவரை சின்ன சின்னதான் தான் ஏதாவது உடம்பில் பிரச்சனை வரும், காலேஜ் போயிட்டு வந்து தேவையான அளவு ரெஸ்ட் எடுத்துக்கிட்டா ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா, என்னை நல்லா பார்த்துக்க நீங்க, பாட்டி, அம்மா, பெரிய மாமா எல்லோரும் இருக்கறப்போ எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது சொல்லுங்க," என்று அவள் அளவிற்கு அவளும் அவனுக்கு சமாதான வார்த்தைகள் கூற கார்த்திக் கொஞ்சம் தெளிந்தான்.
ஆனால் அவனுக்கு தான் அவள் சாமாதானம் கூறினாளே தவிர, வயிற்றில் குழந்தை இருக்கும் போது படிப்பில் கவனம் செலுத்த முடியுமா? இரண்டையும் சேர்த்து சமாளிக்க முடியுமா? என்ற பயம் அவளுக்கும் உள்ளுக்குள் இருந்தது. பொதுவாக தன் மன குழப்பங்களை கார்த்திக்கிடம் சொல்லிவிடுவாள். அவனும் அந்த குழப்பத்தை தெளிய வைப்பான். ஆனால் இந்தமுறை அவனே குழப்பமாக இருக்க, அவனிடம் தன் பயத்தை கூறாமல் முன்பு போல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.
இதில் கர்ப்பகால பிரச்சனைகளாக வாந்தி, மயக்கம் என்று அவளை பாடாய்படுத்த, அடிக்கடி கல்லூரிக்கு விடுமுறை எடுக்க வேண்டியதாக இருந்தது. சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுப்பதால் களைப்பில் அடிக்கடி படுக்க தான் அவளுக்கு தோன்றும்,
அவளுடைய தோழிகளோ, "நீ கவலைப்பாடத நித்யா, இந்த வாந்தி மயக்கமெல்லாம் கொஞ்ச நாள் தான் இருக்கும், பிறகு நார்மல்க்கு வந்துடுவ, அப்போ படிச்சிக்கலாம், அதுவரை நோட்ஸ் எடுத்து வச்சு உனக்கு தரோம், முடியும் போது படி. ரொம்ப ஸ்டெரியின் செஞ்சுக்காத, எக்ஸாம் நெருக்கத்தில் எல்லாம் சரியாகிடும்," என்று அவளுக்கு ஆறுதலாக தான் பேசினார்கள்.
வீட்டில் கூட குறிஞ்சியம்மாள், ஞானசெல்வம் இருவரும் கூட நித்யாவின் நண்பர்கள் போல் தான் கூறினர். கார்த்திக்கிற்கு கலக்கமாக இருந்தாலும் அவளிடம் அதை சொல்லி அவளை குழப்பக் கூடாது என்று அவன் நினைத்திருந்தான். அதேபோல் அவளும் அவனிடம் பயத்தை காட்டவில்லை.
ஆனால் வஞ்சி மட்டும் மகள் மேல் உள்ள அக்கறையில், "நீ இப்போ படிச்சு தான் ஆகணுமா? அதான் இதெல்லாம் அடுத்த முறை கூட எழுதிக்கலாமாமே, பேசாம இந்த காலேஜூக்கு போறதல்லாம் விட்டுட்டு வீட்ல இருந்து ரெஸ்ட் எடு நித்திம்மா, என்னத்தான் வாந்தி மயக்கம் குறைஞ்சாலும் மாசம் போக போக கஷ்டமா தான் இருக்கும், சொல்றதை கேளு," என்று அவரது பயத்தை அவளிடம் திணித்தார்.