தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 20 - சகி
அவ்வாலயமே திருவிழாக் கோலம் பூண்டதாய் தோற்றமளித்திருந்தது. ஆம்...! அம்மாவட்ட ஆட்சியருக்கு அன்று விவாஹம்! இன்று அன்று என்று என தள்ளிச்சென்ற காலம் போய், இன்றுத்தான் அத்தினமும் என்ற நல்வாக்கு செவ்வாக்கினாய் ஔிர்ந்த நன்னாள் அது! தனக்கென எவரேனும் இருப்பாரா அவள் கரம் பற்ற சாட்சியாக என்று அவன் கவலைக் கொண்டிருந்த சூழ்நிலையில், காலம், அவனது தந்தையையே அவன் பக்கம் துணை நிற்க ஆணைப் பிறப்பித்த மடல் மறைமுகமாய் வந்துச் சேர்ந்தது.
சாங்கிய சம்பிரதாயங்கள் முற்றி,
"பெண்ணை அழைத்து வாங்க!" என்ற புரோகிதரின் குரல், அவனது இதயத்துடிப்பினை உட்சபட்சமாய் துடிக்க வைத்தது. சில நிமிடங்களில் அவர்களின் பந்தம் அங்கீகரிக்கப்படும்! இனி வாழ்வனைத்தும் உற்றத் துணையாய், இன்மையிலும், மறுமையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், பெருமையிலும், பேரிடரிலும் என்றும் இணைப்பிரியா நிலைப்பெறும் கைக்கூடி இருந்தது. வதுவின் கோலத்தில், முதன்முறையாய் நிலம்நோக்கிய வண்ணம் வந்த மகளை காணும்போது தாய்,தந்தையின் விழிகள் செய்வதறியாது உறைந்துப் போயின. இத்தனை நாளாய் அவளை எக்கோலத்தில் காண அவன் காத்திருந்தானோ, அக்கோலத்தில் பொற்பாவையாய் வந்த சிவன்யாவை விழிகள் அசையாமல் பார்த்தான் அசோக்.
காத்திருந்த தருணம் கைக்கூடியது, தர்மா இந்நேரம் உடனிருந்திருந்தால் மனதின் சிறு குறை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கும்! இருக்கட்டும்...அவள் நிச்சயம் இப்பொன் நிகழ்வினைக் காணாமல் இருக்க மாட்டாள்! வாழ்வனைத்தும் யாரை உயிராக எண்ணி, யார் மடியில் உயிர் துறந்தாளோ, அவன் விவாகத்தினைக் காணாமல் தாய்மனம் எப்படி இருக்கும் என்ற எண்ண அலைகளுக்கு மத்தியில் சூர்ய நாராயணன்.
பதுமையாய் அருகே வந்து அவள் அமர, வாழ்வில் முதன்முறையாய் அந்த ஆண்மகனின் மனதிலும் நாணம் எட்டிப் பார்க்கவே செய்தது. மறைகள் ஓத, நெறிமுறைகள் படி, புரோகிதர் திருமாங்கல்யத்தினை அவனிடத்தில் நீட்ட, அவர்களின் பவித்ர பந்தத்தினை உறுதிச் செய்ய அவளது கழுத்தினில் அதனைச் சூடினான் அசோக். அச்சமயம் அவளது துணிவனைத்தும் உடைந்துப் போய், எழுந்த பேரின்பம் கண்ணீராய் உருமாற, ஆனந்தத்தில் கண்ணீர் சிந்திய விழிகளை அவன் கவனிக்காமல் இல்லை. இத்தனை திங்களும் இருந்த விலகல்கள் எல்லாம் வாழ்த்துக் கூறி விடைப்பெற, அங்கு உரிமைகள் அதிகாரப் பூர்வமாய் நிலைநாட்டப்பட்டன. அரிசியும், மலர்கள் அங்கிருப்பவரிடமிருந்து மட்டுமல்லாமல், விண்ணவரும் சேர்ந்து தூவுவதாய் அவ்விரு நெஞ்சங்களை உளமாற ஆசீர்வதித்தது.அவள் நெற்றியின் வகிட்டில் அவன் சூட்டிய குங்குமமானது, அவர்கள் இருவரின் உறவினைப் பகிங்கரமாய் உலகிற்கு