பேசாமல் பேசியது!
அன்று மாலை....
தோழியரின் கேலிகளுக்கு ஆளானவளாய், அப்பாவியாய் அமர்ந்திருந்தவளை ஈர்த்தது, "சிவன்யா!" என்ற குரல்! மீனாட்சியின் அத்திடீர் வருகை அவள் புத்தியைத் தடுமாற வைக்க, மற்றவர், தாய் மற்றும் மகளுக்கு இடைவேளைக் கொடுத்து அங்கிருந்து எழுந்துச் சென்றனர். ஒரு குற்றவுணர்வுடன், சிலையாக அமர்ந்திருந்த மகளின் கேசத்தினைக் கோதத் தீண்ட, தீயிடை சுட்டதாய் விலகிப்போனாள் சிவன்யா. அவளது செய்கை அவரை சுக்கு நூறாய் உடைத்தது. அவர் இருக்கும் திசைப்பக்கம் திரும்பியும் நோக்காதவள், அங்கிருந்து வெளியேற முயல,
"ஒரு நிமிடம் நான் சொல்றதை கேளும்மா!" என்ற கண்ணீர் குரல் அவளைக் கட்டுப்படுத்தியது.
"நா...நான் பண்ணது தப்புத்தான்! என்னை மன்னிக்க மாட்டியா? அம்மாவை மன்னித்துவிடுடா!" என்ற குரல் கல்லையும் கரைத்திருக்கும், அவளைக் கரைக்கவில்லை.
"எதுக்கு? மன்னிக்கிற மாதிரியா நடந்துக்கிட்டீங்க? எவ்வளவு பேச்சு பேசுனீங்க? பெத்த பொண்ணுக்கிட்ட பேசுற மாதிரியா பேசுனீங்க?" நினைவுகளால் சட்டென கலங்கின அவள் கண்கள்!
"என்னால எப்படி மன்னிக்க முடியும்? பேசுறது எல்லாம் பேசுவாங்களாம்! அப்பறம் மன்னிப்புக் கேட்பாங்களாம்! நானும் எல்லாத்தையும் மறந்து தலையாட்டிட்டு போயிடணுமாம்! என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? வேணாம்...! நீங்க எனக்குக் கொடுத்த வேதனையை என்னால உங்களுக்கு கொடுக்க முடியும்! இப்போ சொன்னீங்களே, அம்மான்னு..! அந்த ஒரே காரணம் தான் என்னைக் கட்டுப்படுத்திட்டு இருக்கு! போயிடுங்க! உங்களைப் பார்க்கவே விரும்பலை..! நீங்க வராமல் இருந்திருந்தாலே சந்தோஷப்பட்டிருப்பேன்!" என்ற வாக்கியத்தில் ஆடிப்போனார் மீனாட்சி! மனதின் கோபத்தினை எல்லாம் அவள் கொட்டிக் கொண்டே செல்ல, "சிவன்யா!" என்று அதட்டிய குரலால் அடங்கியப் போனாள் அவள். அவர்களின் உரையாடலை கவனித்தவனாய், அவளைக் கட்டுப்படுத்த உபாயமின்றி கடிந்துரைத்தான் அசோக்! இவளா இப்படி நடந்துக் கொள்கிறாள் என்ற வியப்பு அவனுடையது!
"என்னைப் பேசிட்டு இருக்க நீ? மன்னிப்புக்கேளு!" சிரம் தாழ்ந்து கண்ணீரோடு நின்றிருந்தவருக்கு பரிந்து வந்தான் அவன்.
"என்னால முடியாது!" என்றாள் அழுத்தந் திருத்தமாக, ஏனோ சொல்ல வாயெடுத்தவன், வார்த்தைகளை விழுங்கியவனாய், அவள் கரம்பற்றி தனித்து அழைத்துச் சென்றான்.
"என்னம்மா பேசிட்டு இருக்க நீ? அவங்க உன் அம்மா!" என்றதும் கண்கள் பனித்துவிட்டன