இருந்தால் அதை செய்யலாம்" என்று அதிதி கூற,
"அதிரதனும் நானும் இங்கிருந்து வெளியேறி விடுவோம். வேறு இடத்தில் தங்கிக் கொண்டு உங்களது தொலைபேசியில் அழைக்கிறேன்." என்றார் வைத்தியர்.
"ஏன் இப்படி செய்கிறீர்கள்" என்று க்ருபா கேட்டார்.
" எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. என்னையும் அதிரதனையும் யாரோ பின்.தொடர்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது என்னுடைய கடந்த கால சம்பவங்களினால் ஏற்பட்ட பிரமையாக கூட இருக்கலாம். ஏனெனில் இதே போன்று மரபணு பிரச்சனையை நான் மூலிகை மருத்துவத்தால் தீர்க்க நினைத்த பொழுது என் பேத்தி பறிகொடுத்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. அதனால் வேறு யாரோ இந்த புதிய முயற்சியை தடுக்க நினைக்கலாம் என்று என் உள்மனம் சொல்கிறது. எதற்கும் ஒரு பாதுகாப்பாக நீங்கள் மட்டும் இங்கு இருங்கள். நாங்கள் வெளியே இருந்தால் அவர்களால் இந்த இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாது என்று நினைக்கிறேன்" என்றார்.
"சரி ஐயா உங்களுடைய வார்த்தைக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். மூன்று நாட்கள் கழித்து என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிவிட்டு செல்லுங்கள்" க்ருபா கேட்டார்.
"இந்தப் பெண்ணின் உடல் நிலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை எனில்... ஆபத்தான நிலை எதுவும் இல்லை எனில்... நீங்கள் மூன்று நாள் கழித்து இந்த மூலிகை நீரிலிருந்து வெளியே வர செய்து விடலாம். அதன் பிறகு மீண்டும் ஒரு தரம் கட்டை மாற்றி விட்டு திரும்பவும் நீரில் அமர வைக்க வேண்டும். மூழ்க தேவை இல்லை. அமர வைத்தால் போதும் அந்த சமயத்தில் அபக சுவாச கருவிகள் எதுவும் பயன்படுத்த தேவையில்லை. இது உடல் எலும்புகளை பலப்படுத்தும் சிகிச்சை மட்டுமே"
அப்பொழுது அதிரதன் குறுக்கிட்டு,
" நீங்கள் கவலைப்பட வேண்டாம் அங்கிள். நாங்கள் இடையில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது இங்கே தொடர்பு கொள்கிறோம். நீங்கள் நிலவரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.. ஒருவேளை வைத்தியரின் சந்தேகம் சரி எனில் நாம் கவனமாக இருந்தே ஆகவேண்டும்.