மகளின் போக்கு தாய்க்குத் தெரியாதா என்ன? அவள் மறுக்காமல் இருந்ததால் மகளுக்கு திருமணத்திற்கு உண்டான குணம் வந்துவிட்டதை எண்ணி உள்ளுர மகிழ்ந்தார்.
“பிருந்தா பின்னலுக்கு உள்ள ஒரு சீக்ரெட் மெசேஜ் இருக்கு தெரியுமா?” நிதானமாக அம்மா கேட்க
இளையவள் “ஜடைல என்னமா இருக்க போகுது?” என முந்திக் கொண்டாள்.
அதற்கு புன்னகையை பதிலளித்த அம்மா “ நீயும் கேளு சௌமி. ஜடைல மூணு கால் இருக்கு இல்லையா? இடது பக்க காலும் வலது பக்க காலும் பிறந்த வீடு புகுந்த வீடு மாதிரி. நடு கால்தான் பொண்ணு. ஜடை பின்னயதும் நடு கால் எங்க இருக்குனே தெரியாம மத்த ரெண்டு காலோட ஐக்கியமாயிடும். பொண்ணும் அப்படிதான் பிறந்த வீடு புகுந்த வீடு ரெண்டு வீடையும் சரிசமமா நடத்தி பாசம் காட்டணும். ” எனச் சொல்லி முடித்துக் கொண்டு மகளுக்கு பூ வைத்தார்.
“அடேயப்பா ஒரு பின்னல்ல இத்தன பிளாசபியா . .தாங்காதும்மா” என சௌமி நடிகையர் திலகமாக மாறினாள்.
இப்பொழுதுதான் பிறந்து தளிர் நடைப் போட்ட தன் பெண்ணா இப்படி வளர்ந்து சேலைக் கட்டி திருமணத்திற்கு நிற்கிறாள் என பெருமையாக பார்த்த அம்மா உடனே திருஷ்டி கிழித்தார். ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்க்க . . .
சௌமி “பிளாஷ் பேக்கா? அம்மா அங்க எல்லாரும் வெயிட் பண்றாங்க” இடைமறித்தாள்.
“ அம்மா பிருந்தாவ கூடிட்டு வான ” என வெளியிலிருந்து சாரதா குரல் கேட்க
“வா பிருந்தா” என அம்மா மகளும் வெளியே வர . . சௌமி துள்ளி குதித்து முன்னே சென்றாள்.
அனைவரும் அமர்ந்திருக்க பிருந்தா வந்து நமஸ்கரித்தாள். “என் பக்கத்துல உட்காருமா” என தனுஷ் அம்மா அவளை அழைத்துக் கொண்டார். தயக்கத்துடன் அமர்ந்தாள்.
“இவன்தான் என் மகன் தனுஷ்” என அறிமுகம் செய்தார். மணப்பெண் அனைவர் முன்னும் வருங்கால கணவணை ஏறெடுத்துக் காண வெட்கப்படுவாள் என்பதால் பெரியவர்களின் உபகாரம்.
பிருந்தாவும் தனுஷை கண்டாள்.
அவன் “ஹாய்” என்றான் மென்னகையுடன் மிருதுவாக
அவளும் மெல்லிய தலையசைப்போடு புன்னகைத்தாள்.
“இவன் என் ரெண்டாவது மகன் சஞ்சய் பீ.டெக் கடைசி வருஷம் படிக்கிறான் . . இவர் தனுஷ்