மறுநாள் ரம்மியமாக விடிந்தது. வீடே பரபரப்பாக இயங்கியது. சௌமி என அழைத்து “பிருந்தாக்கு எதாவது உதவி தேவையானு பாருமா” என்றார் சாவித்ரி. மாப்பிள்ளை வீட்டினர் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டனர்.
கண்ணாடியில்த் தெரிந்த தன் உருவத்தை கண்ணிமைக்காமல் பிருந்தா பார்த்துக் கொண்டிருந்தாள். கண்ணனின் வெண்ணையொத்த நிறம், அழகிய கண்கள், நீண்ட நாசி, சிவந்த அதரங்கள், அலைபாயும் கூந்தல், வயதிற்கேற்ப உடல் வாகென அழகாய் இருந்தாள்.
ஏசியின் குளுமை அறையை நிரப்பினாலும் காதோரத்தில் வேர்வை கோடுகள். கண்ணாடியில் அவளுக்கு பின்னால் முருகன் வள்ளி தெய்வாணையோடு புகைப்படத்தில் மோன புன்னகைப் புரிந்தபடி இருந்தார்.
இந்த தருணத்தில் ஸ்னோ வொயிட் மட்டும் மாயக் கண்ணாடியிடம்
“Mirror, mirror on the wall,
who’s the fairest of them all?”
எனக் கேட்டிருந்தாள். அது பிருந்தா என இவளின் பெயரைக் கூறியிருக்கும்.
அழகு அறிவு பணம் அந்தஸ்து என எதற்கும் குறைவில்லாமல் வளர்ந்தவள். அதனால் ஏற்பட்ட செருக்கு முகத்தில் நன்றாகவே தெரிந்தது. இல்லாமை என்றுமே அவளிடத்தில் இல்லாமல் இருந்தது.
“அக்கா ரெடி ஆயிட்டயா? ” என அவள் தங்கை சௌமியா ஓடி வந்தாள்.
“மாப்பிள்ளை பாக்க சூப்பர் கா. போட்டோ விட நேர்ல அழகா இருக்கார்” என்ற சௌமி கன்னத்தை பிருந்தா புன்னகை அரும்ப தட்டினாள்.
மாம்பழ நிறத்தில் சன்னமான பச்சைப் பார்டர்ப் பட்டுபுடவை, மேல் கழுத்தில் ஒரு தங்க செயின் அதில் ஆர்டின் பெண்டண்ட்., இரண்டு வைர வலையல், லைட் வெயிட் வைர காதணி மற்றும் எப்பொழுதும் அவள் அணிந்திருக்கும் சன்னமான மோதிரம் என மிதமான அலங்காரம் செய்திருந்தாள்.
அலைபாயும் கார்குழல் விரித்து நிலையில் இன்னமும் அழகுச் சேர்த்தது. அம்மா அறைக்குள் வந்தார் “என்னடி இன்னும் ஜடை பின்னலையா? டைம் ஆச்சு” என அவசரப்படுத்தனார்.
“இப்படியே ப்ரீயா இருக்கட்டும் அக்காக்கு நல்லா இருக்கு” என இளையவள் வாதாட
“நீ சும்மா இரு” என்ற அம்மா பிருந்தாவை அமர வைத்து அவளுக்கு அழகாய் பின்னலிட தொடங்கினர். வேறொரு சமயமாய் இருந்தால் பிருந்தா “இப்படியே இருக்கட்டும்” எனச் சண்டையிடுவாள். ஆனால் இன்று மறுக்கவில்லை.