நிறுத்தம் வரை கொண்டு வந்து விட கார் ட்ரைவேரிடம் சொல்லியிருந்தார் விசாலம். முதலில் தமிழ்செல்வி இதற்க்கு மறுத்தாலும் அவரிடம் வேலை பார்ப்பவரின் பாதுகாப்பு அவருக்கு முக்கியம் என்று ஆரம்பத்திலேயே பிடிவாதமாக சொல்லிவிட்டார் விசாலம்.
வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றி விட்டு வந்த தமிழ் இரவு உணவுக்காக எல்லாம் எடுத்து வைத்து அமர்ந்திருந்த கலைவாணியின் அருகே வந்து அமர்ந்தாள்.
"அவங்க ரெண்டு பேரும் சாப்பிட்டாங்களா அம்மா?" என்றபடி அங்கிருந்த மற்றொரு அறையை பார்த்தாள். அது மூடி இருந்தது.
"சாப்டாங்க. நீ உக்காரு" என்றவர் அவளுக்கும் தனக்குமாக தட்டுகளில் இட்லியை எடுத்து வைத்தார்.
"எப்படிடா இருக்கு புது இடம்? உனக்கு ஓகே வா? ஏதாவது கஷ்டமா இருந்தா வேண்டாம். வேற இடம் பார்த்துக்கலாம்." கலைவாணி சொல்ல, "அதெல்லாம் இல்லைம்மா. விசாலம் பாட்டி ரொம்ப நல்ல டைப். நல்ல பிரெண்ட்லியா இருக்காங்க. எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு." தமிழ்செல்வி சொல்ல, ஏதோ சொல்ல வந்து தயங்கினார் கலைவாணி.
அவரின் தயக்கத்தை உணர்ந்த தமிழ்செல்வி, "என்னம்மா? ஏதாவது கேட்கணுமா? ஏதாவது பணம் வேணுமா?" எனவும் "தமிழ், இவ்ளோ கஷ்டப்படணுமா? இந்த மாதிரி வேலை எல்லாம் இன்னும் எவ்ளோ நாள் பாக்க போற? கொஞ்சம் யோசிடா. நீ படர சிரமத்தை பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு" என்றார் கலைவாணி.
"அம்மா இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. உங்களுக்கும் தங்கைகளுக்கு செய்றதுல எனக்கு என்ன கஷ்டம்? அதுவும் இப்போ எனக்கு வேலை ரொம்பவே கம்மி தான். பெருசா எந்த வேலையும் இல்லை. அப்பறம் என்ன?" தமிழ்செல்வி கேட்க, " நீ பண்ற வேலையை நான் குறை சொல்லல. ஆனா இது உனக்கு நிரந்தரமானது இல்லையே தமிழ். உன் எதிர்காலம்னு ஒன்னு இருக்கே. அவங்க ரெண்டு பேருக்கும் செய்யவேண்டியது உன் கடமைனு சொல்லிட்டு நீ எல்லாம் செய்து முடிக்கும் போது உன் நிலைமை என்னாகும்னு யோசிச்சியா? நான் சொல்றதை கொஞ்சம் கேளு. நீ உன் படிப்பை கன்டினியூ பண்ணு. உன் படிப்பு முடியற வரைக்கும் என் பென்சன் வெச்சு சமாளிக்கலாம்" கலைவாணி ஒருவாறு சொல்லவந்ததை சொல்லிவிட, "அம்மா ப்ளீஸ் இது என்னுடைய கடமை. இலக்கியா படிப்பு முடியட்டும். அவளுக்கு கேம்பஸ்ல ஒரு வேலை கிடைக்கட்டும். அதுக்கு அப்பறம் நான் பார்ட் டைம் ஜாப் ஏதாவது பார்த்துட்டு என் படிப்பை கன்டினியூ பண்றேன். இப்போ இதை பத்தி எதுவும் பேச வேண்டாம்" என்றவள் அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.