(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

பரத் வெட்கப்பட்டு சிரிக்க, "அடப்பாவி, அப்போ நம்ம தான் லேட்டா!!!" என அசோக் கன்னத்தில் கைவைத்து அமர்ந்தான்.

அசோக் செல்லும் வரை அவர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த தமிழ்செல்விக்கு நேரம் போனதே தெரியவில்லை. அசோக் போனதும் தான் இன்று அவள் சற்று சீக்கிரமே கிளம்ப வேண்டும் என்பதை உணர்ந்தவள் சாப்பிடும் முன் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை எல்லாம் எடுத்து வைத்தாள்.

அசோக்குடன் பேசி கொண்டிருப்பது பலகாலம் பழகிய ஒருவருடன் பேசுவதை போல இருந்தது தமிழ்செல்விக்கு. பேச்சின் இடையில் அவ்வப்போது அவன் முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு சொல்லும் நகைசுவைகளுக்கு வாய் விட்டு இவள் சிரிப்பதை பார்க்கும் போது அவன் இவளின் சிரிப்பையும் இவளின் அழகையும் பாராட்டுவான். ஆனால் அதெல்லாம் ஒரு நேர்மையான பார்வையாகவும் பேச்சாகவுமே இருந்தது. அவனிடம் பேசும்போது, தெரியாத ஆணிடம் பேசும்போது தோன்றும் எந்தவிதமான அசவுகரியமும் இல்லாமல் இருப்பது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவளுக்கு சட்டென காலையில் பார்த்த ஸ்ரீராமின் பார்வை நினைவுக்கு வந்தது. எனோ அந்த பார்வை அவளுக்கு பிடிக்கவில்லை. அதென்ன முதல் முதலில் பார்க்கும் ஒரு பெண்ணை அப்படி ஒரு பார்வை பார்ப்பது என எரிச்சலாக வந்தது. ஏனோ அவன் மேல் அவளுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் வரவில்லை. அவனின் சிரிப்பும் பேச்சும் பாட்டி காணாதபோது அவன் அவளை பார்த்த விதமும் அவளை அவனிடம் இருந்து தள்ளியே இருக்க சொன்னது.

"சரி இப்போது எதற்கு இந்த தேவை இல்லாத எண்ணம் எல்லாம்...அவனை ஒருமுறை தானே பார்த்தோம். இனி பார்க்காமல் தவிர்த்து விட்டால் போதும்" என்று எண்ணியவள் பாட்டிக்கு மறக்காமல் இருக்கும் வண்ணம் டைனிங் டேபிளில் அந்த மருந்துகளை எடுத்து வைத்து விட்டு பாட்டியிடமும் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவள் எப்போதும் இறங்கும் பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பே இருந்த ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கியவள் அங்கிருந்த அந்த பெரிய வணிக வளாகத்திற்குள் நுழைந்தாள். சென்னையின் வெப்பநிலைக்கு அந்த வளாகத்திற்குள் நுழைந்ததும் அடித்த ஏசி காற்று சில்லென முகத்தில் பட்டது. காவ்யாவுக்கு அடுத்து எழுத வேண்டிய நீட் தேர்வுக்கான புத்தகம் இங்குள்ள ஒரு கடையில் கிடைக்கும் என அறிந்து அதை வாங்க வந்திருந்தாள்.

அந்த கடை இரண்டாவது தளத்தில் இருப்பதால் அங்கிருந்த தானியங்கி படிக்கட்டில் ஏறியவள் வேடிக்கை பார்த்தபடி இரண்டாவது தளத்தில் வந்து இறங்கினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.