தொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 12 - சகி
காதலின் ஆளுமைகளுக்கு விலக்கானது என்றுமே இருந்ததில்லை. காதலில் ஆணோ, அல்லது பெண்ணோ ஆளுமைப் படுத்துகிறார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை! உண்மையில் ஆளுமைப்படுத்துவதெல்லாம் காதல் ஒன்றுத்தான். அதாவது, இதை செய்யாதே, அதை செய்யாதே என்று ஆளுமைப்படுத்தும் மனிதர்களிடையே; ஏதேனும் ஒன்றினை மும்முரமாக செய்துக் கொண்டிருக்கும் சமயத்தில், கவனம் முழுதும் வேறு எவருடனோ காலங் கழிக்க, சிந்தனைகள் மட்டும் நம்முடன் இருப்பதில் உள்ளது காதலின் ஆளுமை! இதை வினவியே தீர வேண்டும்! காதலில் வயப்பட்டவர்கள், தங்களின் மனதிற்கோ, தங்கள் துணையின் மனதிற்கோ கட்டுப்பட்டு இருப்பர்; ஆனால், காதலின் மனதிற்கு எவரேனும் கட்டுப்பட்டு இருக்கின்றனரா? வானில் தோன்றும் உடுக்களானது, ஆதவனை விடவும் பிரகாசமானது, ஔி நல்க கூடியது. ஆயினும், விடியலில் ஒற்றை ஆதவன் நல்கும் ஔியினை, இரவில் இலட்சம் கோடி உடுக்களாலும் வழங்க இயல்வதில்லை. ஆனால், ஆதவனிடத்திலிருந்து ஔிப்பெறும் வெண்ணிலவானது அத்தனை உடுக்களை விடவும், அதீத வெளிச்சம் நல்குகிறது. வாழ்வில் மனிதனானவன், அனைத்தினையும் அடைந்திருக்கலாம். அவனிடத்தில் எண்ணிலடங்கா செல்வமும், ஞானமும், வீரமும், சித்திகளும், அதிகாரங்களும் கூட இருக்கலாம். ஆனால், அன்பெனப்படும் ஒற்றை ஆதவன் நல்கும் ஔியினை பிரபஞ்சத்தின் அனைத்து வரங்களும், வஸ்துகளும் ஒன்றிணைந்தாலும் இங்கு நல்க இயல்வதில்லை என்பதே மெய்யாகும்! தேய்பிறை, வளர்பிறை இருப்பினும், ஆதவன் ஔி வாங்கும் நிலவின் எழிலும், கீர்த்தியும் எள்ளளவும் இங்கு குன்றுவதில்லை.
அவள் மாறவில்லை...மாறியிருப்பாளோ என்ற அச்சமெல்லாம் மண்ணோடு மண்ணாய் சரிந்து சிதறியது, இத்தனை ஆண்டுகள் கழித்த அந்த ஓரக்கண் பார்வையில்! ஆலயத்தில் கிட்டிய அவள் தரிசனம், ஆழமாய் ஊடுருவியிருக்க, அமைதியான மனதில் ஆனந்தம் ஆர்ப்பாட்டமாய் ஆடிக் கொண்டிருந்தது. ஒருவேளை தான் வர போவதில்லை என்று அவள் எதிர்நோக்கி இருந்திருக்கலாம். ஆனால், முகத்தரிசனம் கண்டதும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும், ஆலயம் என்றும் பாராமல், சுற்றம் உணராமல் சிவந்துப் போன அவள் எழில் முகம் ஆயிரமாயிர கதைகளைப் புகட்டியது இராகவனாருக்கு! அகவை ஐம்பதினைக் கடந்தவேிட்ட சமயத்திலும், அவள் இளமை குன்றவில்லை. அனைவருக்கும் அங்கு நிகழ்ந்துக் கொண்டிருந்த நிகழ்வு யாதென்பது விளங்கியிருக்கும் ஆனால், அதனைக் குறித்து சிறிதளவும் கவலைக்கொள்ளாதவனாய், தாயிடமே ஒன்றிருந்தான் இளையவன். அவனுக்கு அப்படியே எனது முகபாவம் தான்! குணங்கள் அவளை வளர்த்தவளையே சார்ந்திருந்தன. அன்றைய நாள் வராமல் இருந்திருக்கலாம். அவன் எங்கள் இருவருக்கும் வாரிசாகி இருந்திருப்பான். என்