"வாடா மகனே!" என்ற அகிலாண்டேஷ்வரியின் குரல், அவர் பதற்றத்தினை மேலும் அதிகமாக்கியது.
"மா...! எப்படிம்மா இருக்கீங்க?" என்று தாயாரை ஆர்வமாக தழுவிக் கொண்டார் இராகவன். பட்டணம் சென்ற ஐந்தாண்டுகளில், எப்போதேனும் வந்து செல்வதுண்டு அவ்வளவே...இறுதியாக அனைவரையும் பார்த்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி இருக்கும்! தாயின் தரிசனம் கிட்டிய விழிகளுக்கு தாரமாய் வரப்போகிறவளின் தரிசனம் கிடைக்க ஏங்கியது அவர் மனம் வந்ததும் வராததுமாய்!
"ஆமா! தேவி எங்கே?" தங்கையினைக் குறித்து விசாரித்தார் அவர். அதன்பின்னாவது, தன்னைக் குறித்து வினா எழும்புமா என்று ஏங்கிய மனதினைச் சீண்டிப் பார்க்கவே, ஏதேதோ கதைகளை வேண்டுமென்றே பேசினார் அவர்.
"சரிம்மா! பசிக்குது, சாப்பாடு எடுத்து வைங்க! நான் போய் குளித்துவிட்டு வரேன்." தன் மகன் தர்மாவைக் குறித்து விசாரிக்காமல் சென்றது, தாயாரின் மனதிற்குமே ஆச்சரியத்தினை விளைவித்தது. அவர் விழிகளை அவளைத் தேடவும் இல்லை. நேராக தன்னறைக்கு சென்றதனைக் கண்டவர், சற்றே ஏமாற்றத்தோடு வெளியே வர, குழப்பிப் போனவராய் பாவமாய் அவர் முகம் நோக்கனார் அகிலாண்டேஷ்வரி.
குளித்துவிட்டு புத்துணர்வோடு வந்து உணவுமேசையில் அமர்ந்தார் இராகவன். விதவிதமான உணவுகள் அவருக்காக காத்திருந்தன. தாயார் ஒவ்வொன்றாய் அவற்றை பரிமாற, முதல்முறை சுவைத்த போதே கண்டறிந்துக் கொண்டார் அது தர்மாவின் கைப்பக்குவம் என்று! அவளது கைப்பக்குவம் அவள் ஒருத்திக்கே உரியது.
"எப்படிடா இருக்கு?" என்று ஆர்வமாய் கேட்ட தாயினை ஒரு நொடி கூர்ந்தார் அவர். மாமியார்- மருமகளின் இரகசிய ஒப்பந்தம் குறித்துக் கண்டறிய அவருக்கு அதீத நிமிடங்கள் பீடிக்கவில்லை.
"என்னம்மா சமையல் இது? ஒரே உப்பு! நல்லாவே இல்லை..யார் பண்ணா? பசிக்குதேன்னு சாப்பிட்டுட்டு இருக்கேன்!" என்று அவர் கூறவும் சட்டென கண்கள் கலங்கிவிட்டன தர்மாவிற்கு! அப்படியேனும் அவளாய் வரட்டும் என்று எதிர்நோக்கினார் இராகவன். அவரோ, கசிந்துருகிய கண்ணீரினைக் கட்டுப்படுத்த இயலாமல் திண்டாடிக் கொண்டிருந்தார். கலங்கிய அவர் முகத்தினைக் கண்டவளாய்,
"என்னம்மா ஆச்சு?" என்று வினவினாள் சாரதா.
"ஒண்ணுமில்லை...நீ போ!" என்று கூறிவிட்டு முகத்தினை வேறுப் பக்கமாய் திருப்பிக்