காட்டாமல் சாதாரணமாய் இருந்தார்.
"உன்னைப் பார்க்காம எவ்வளவு ஏங்கிப் போய் வந்திருக்கிறேன் தெரியுமா? ஏன்டி இப்படி எல்லாம் என்னை சித்ரவதை பண்ற? எப்போ தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்க?" பட்டென அவர் கேட்டுவிட, பெண்மைக்கே உரிதான அனைத்து இயல்புகளும் அவரிடத்தில் முந்திக்கொண்டு தாண்டவமாடின.
"நீங்க கேட்கிற விதமே சரியில்லை ..என்னை விடுங்க! நான் போறேன்." என்று அவர் விலக, அவரோ அவர்களின் நெருக்கத்தினைக் குறைத்தார். மனமானது படபடப்பினை அதீதமாய் உணர, சட்டென அவரைத் தள்ளிவிட்டவராய், நாணத்துடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தவரைக் கண்டு வாய்விட்டு சிரித்தார் இராகவன். அழகிய காலம் அது....மிக, அழகிய காலம் அவை! அதனைக் குறித்து சிந்திக்கும் போதே மனம் இலகுவானது இராகவனுக்கு! விவாஹம் முடிந்து ஓராண்டுகளில் ஆதியும் பிறந்துவிட, வேறு என்ன வேண்டும் ஒருவனுக்கு என்பதாய் வாழ்வினை எண்ணிலடங்கா மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தருணம் அவையெல்லாம்..! புயலென அன்றைய நாள் மட்டும் வாராதிருந்தால்...!
"என்னங்க பழக்கம் இதெல்லாம்? என்கிட்ட என்ன சத்தியம் பண்ணீங்க? இனிமே குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணீங்க தானே! இப்போ என்னடான்னா, நாளைக்குப் பார்ட்டி இருக்குதுன்னு சொல்றீங்க? நாளைக்கு ஆதியோட ஐந்தாவது பிறந்தநாள், காளஹஸ்தி போகணும்னு சொன்னா, நீங்க நாளைக்கு...." தனது பேச்சினைப் பாதியிலே தடை செய்தார் தர்மா. கட்டுப்படுத்த இயலா சினமானது அவரிடத்தில் தாண்டவமாடி கொண்டிருந்தது.
"தர்மா...புரிந்துக்கோ! இது முக்கியமான பிசினஸ் பார்ட்டி! என்னால தவிர்க்க முடியாது. என் நேரம் இப்படி அமையுது, நிஜமா, நான் குடிக்க மாட்டேன்! ப்ராமிஸ்...!ஏ...அவன் என் இரத்தம்டி, எனக்கு என்ன வேண்டுதலா அவன் பிறந்தநாளை கொண்டாடக் கூடாதுன்னு! எனக்கும் கஷ்டமாக தான் இருக்கு தர்மா! ப்ளீஸ் புரிந்துக்கொள்!" தன்னால் இயன்றவரை அவர் சமாதானம் செய்ய, கோபமிருப்பினும் வழியின்றி அவர் வேண்டுதலை ஏற்றாக வேண்டிய சூழல் உருவானது.
"நீங்க மட்டுந்தான் இருக்கணும். சாரதா அவங்க ஊருக்குப் போயிருக்கா! வர எப்படியும் இரண்டு நாள் ஆகும்! நாங்க கௌரியை கூட்டிட்டுப் போறோம். சமைக்க ஆளிருக்க மாட்டாங்க! கொஞ்சம் பார்த்துக்கோங்க!" என்றவரை கண்டு சிரித்துவிட்டார் அவர்.
"விடேன்! நாளைக்கு ஒருநாளாச்சு, வெளியே நல்ல சாப்பாடு சாப்பிடுறேனே!" என்று அவர் சிரிக்க, அவருக்கு வலிக்காதப்படி இராகவனின் மார்பில் தட்டி, அவரது அணைப்பினுள் சேர்ந்தார் தர்மா.