"கௌ...கௌரி! உன் குழந்தையைப் பற்றி யோசிக்க மாட்டியா?" ஆடிப்போனதுத் தாய்மனம்.
"நான் ஏன்மா யோசிக்கணும்? இதைப் பெற்று எடுத்தா எனக்கு என்ன பெயரும் புகழும் வரப்போகுதா? அவமானம் மட்டுந்தான் மிஞ்சும்! நீங்க என்னச் சொன்னாலும் சரிம்மா! என்னால இந்த அசிங்கத்தோட வாழ முடியாது! அதற்கு பேசாம நான் செத்துப் போயிடுவேன்!" ஒரே முடிவாய் கூற திகைத்துப் போய் நின்றார் தர்மா. கருவில் உயிரோடு இருக்கும் அப்பாலகனைக் குறித்துக் கவலை எல்லாம் எவ்வித தொடர்பும் அற்ற அத்தாய்க்கு மட்டுமே இருந்தது.
"சரி...நாளைக்கு நானே டாக்டர்கிட்ட உன்னை கூட்டிட்டுப் போறேன்! எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு முடிவைக் கட்டலாம்." வாக்களித்தார் அவர். அளித்த வாக்கினை நிறைவேற்ற வேண்டும் தான்! ஆயினும், அவ்வாக்கினை விடவும், உலகினைக் காணத்துடிக்கும் அப்பாலகன் உயர்ந்தவன். விவாஹத்திற்கு முன் சுமக்கப்படும் கருவாயிடினும், அதுவும் ஓர் உயிர் தான்! மணவாழ்வின் பின் மட்டும் வம்ச விருத்தியாகும் சூழல் அனைவரது மனதிலும் ஆனந்தத்தினை அளிக்கிறது. ஆனால், தவறுதலாய் மணவாழ்வின் முன் உருவாக்கப்படும் உயிரினை சமூகம் அவமானப்படுத்தி புண்ணியம் காண்கிறது. தேடிய அப்புண்ணியத்திைனை ஏழேழு தலைமுறைக்கும் சேர்த்து வையுங்கள்! வையத்தில் வாழ்வாங்கு காலம் வாழ்கிறோம், என்றேனும் ஓர்நாள் அக்காப்பகங்கள் அன்பிற்காக, உணவிற்காக ஏங்கும் மழலைகளைக் குறித்து என்றேனும் சிந்தித்து இருக்கிறோமா? நம் குழந்தை நமக்கு உயர்வு! அவர்களை மற்றவரோடு ஒப்பிடுறோம்! என்றேனும் ஓர் நாள் உறவற்ற குழந்தைகளை நம் குழந்தைகளோடு ஒப்பிட்டு உள்ளோமா? இருக்காது...அது எப்படி இயலும்? எவருக்கோ பிறந்த சிசுத்தானே! இரத்த சம்பந்தம் மட்டும் தான் தாய்மையையும், தந்தை அன்பையும் தீர்மானிக்கிறது என்றால், வையமே சபிக்கப்படட்டும்! அப்படி சுயநலம் பெற்ற அன்பானது இருப்பது ஒன்று, இல்லாதிருப்பதும் ஒன்று! வாழ்வில் என்றேனும் ஓர்நாள், ஒருமுறை ஒரே முறையேனும் காப்பகத்திற்கு சென்று அம்மழலைகளைக் காணுங்கள்! வாழ்வில் அனைத்தையும் பெற்றோம் என்று தலைக்கனத்துடன் வாழ்பவர்களின் பெருமிதத்தினை எதுவுமற்ற நிலையிலும் எல்லாம் உள்ளது என்ற திருப்தியுடன் வாழும் அம்மழலைகள் உடைத்துவிடுகின்றன. அன்பெனப்படுவது பாரப்பட்சமற்றது! பாரப்பட்சம் கொண்டால் தான் அன்பென்றால், அதுவே மிகப்பெரிய சாபமாகிப் போகும்! இங்கு அனைத்து உயிர்களும் வாழ உரிமையுண்டு! அவர்களின் உரிமைகளைத் தகுதியற்றவர் எவரும் தீர்மானிக்க வேண்டியதில்லை.