"நீங்க சொன்ன மாதிரியே கௌரிக்கிட்ட குழந்தையை கலைத்தால் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிருக்கேன் தர்மா! என்னால முடிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு காப்பகம் பக்கத்து ஊரில் இருக்கு! அவங்க அங்கே தங்கிக்கட்டும். குழந்தைப் பிறந்ததும், அதை உங்கக்கிட்ட சேர்ப்பது என் பொறுப்பு!" வாக்களித்த மருத்துவரை நன்றியோடு கரம் கூப்பினார் தர்மா. காலங்கள் உருண்டன. நிறைமாத கர்ப்பிணியானவளுக்கு வலி ஏற்பட, செய்தி அறிந்து விரைந்தவளுக்குப் புலப்பட்டது எல்லாம் ஓர் கடிதம் மட்டுமே!
"என்னை மன்னித்துவிடுங்கம்மா! நான் போறேன், எனக்கு இந்தக் குழந்தை வேணாம்! இதை நம்ம ஊர் எல்லையில இருக்குற சிவன் சிலைக்கு முன்னாடி போட்டுவிட்டுப் போறேன். நீங்க என்னை ஏமாற்றிட்டீங்க! என்னைக் குழந்தைப் பெற வைத்து என்னை அவமானப்படுத்துவதுத் தான் உங்க நோக்கம்! நான் உங்களுக்குத் துரோகம் பண்ணிட்டேன்னு என்னைப் பழித்தீர்க்க பார்க்கிறீங்க! அதற்கு நான் இடம் தர மாட்டேன்." என்று விளக்கிய அக்கடிதத்தினைப் படித்தவராய், பதறிக்கொண்டு அவ்விடத்திற்கு அவர் வருவதற்குள் ஊரே அவ்வெல்லையில் கூடியிருந்தது, இராகவனை உட்பட!
"எவ பெத்துப்போட்டதோ! இப்படி ஊருக்கே சாபமா வந்து வாய்த்திருக்கு! நம்ம ஊரு பொண்ணாத் தான் இருக்கும்! எனக்கு அந்தக் கௌரி மேலே தான் சந்தேகமா இருக்கு!" அவரவர் நியாயங்களை அத்தர்மவான்கள் பேசிக் கொண்டிருக்க, ஆடிப்போய் அங்கே வந்தார் தர்மா. அந்த இறைவனின் சிலை கீழே கிடத்தப்பட்டு கதறிக்கொண்டிருந்தது அந்தச்சிசு! கேள்வியோடு இராகவனை அவர் ஏறிட, அங்கிருப்பதுத் தனது வாரிசு என்பதை அறிந்தும் அதனை வெளிப்படுத்தாமல் சங்கடத்தில் நின்றுக் கொண்டிருந்தார் அவர்.
"உங்கக்கிட்ட வேலை செய்துட்டு அந்தக் கௌரி பண்ண காரியத்தைப் பாருங்கம்மா! நாங்க அப்போவே சொன்னோம்ல அவளை நம்பாதீங்கன்னு! என்னக் காரியம் செய்திருக்கா பாருங்க! எவ்வளவுப் பெரிய அசிங்கம் இது? அதைக் கொண்டு வந்து நம்ம காவல் தெய்வம் கீழே போட்டுட்டு, இப்போ தீட்டு ஆகியிருக்கும்! இராகவன் ஐயா, பேசாம இந்தச் சிலையை மூடிட்டு வேற இடத்துல பிரதீஷ்டை பண்ணலாம்!" என்றார் ஓர் பெரியவர். அவர்கள் எவரது கண்களிலும் அப்பாலகன் தென்படவில்லை, தாய் தந்தையரைத் தவிர! தந்தையோ தன் கௌரவத்தினை நிலைநிறுத்த மௌனம் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் தாய்மனம்??? மெல்ல அடியெடுத்து வைத்து அப்பாலகனை நெருங்கியவர், தன்னிரு கரம் கொண்டு அவனைத் தூக்க, அங்கிருந்த சப்தமெல்லாம் அடங்கி நிசப்தமானது!
"பையன் பிறந்து இருக்கான்!" அத்தாயின் முகம் இளகி இருந்தது. தான் ஈன்ற புதல்வனைக்