தேற்ற வழியின்றித் தவித்தான் ஆதித்யா.
"மா! அதெல்லாம் இல்லைம்மா...அவன் ஏதோ விளையாடுறான்! உங்க மேலே தப்பே இல்லைம்மா!" கண்ணீரோடு தாயை தன் மேல் சரித்துக் கொண்டு சமாதான மொழிகள் புனைந்தவனின் கண்களிலிருந்துக் கண்ணீர் அவனையே அறியாமல் வெளியானது.
இது இவ்வாறு நிற்க...அங்கே சென்னையில்...
"டேய்! லூசாடா நீ? எதுக்குடா இப்படி பண்ற?" என்று உடையானை சரளமாய் சாடிக் கொண்டிருந்தான் ரவி.
"ப்ளீஸ்டா! திரும்ப திரும்ப அதையே கேட்காதே! எனக்குத் தலையே வெடித்துவிடும் போல இருக்கு!" விரக்தியுடன் கூறினான் இளையவன்.
"எங்கேயாவது போய் மோதிக்கிட்டு செத்துத் தொலைய வேண்டியதுத் தானே! ஏன் இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்க? அண்ணா பேசும் போது அம்மா குரல் கேட்டது, எப்படி பதறிப் போனாங்க தெரியுமா? ஏன்டா இப்படி பண்ற?" அவ்வளவு சாடல்களுக்குப் பின்னும் சுவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் உடையான்.
"நான் இத்தனை வருடமா அவங்க வாழ்க்கையில குறுக்கே இருந்திருக்கேன்டா! என்னால தான் அம்மா அவங்க குடும்பத்தையே விட்டு இத்தனை வருடமா பிரிந்திருந்தாங்க ..அண்ணன் அப்பா பாசமே இல்லாமல் இத்தனை வருடமா வளர்ந்திருக்கான். நான் எங்கே இருக்கேனோ அங்கே கஷ்டம் மட்டுந்தான்டா இருக்கு! இனிமேலாவது, அவங்க ஒண்ணா சேர்ந்து இருக்கட்டும்!" என்றான் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!
"டேய் பைத்தியக்காரா! ஐயோ இவன்கிட்ட என்னன்னு பேசுறது நானு! நீ எங்கேயோ தொலைந்துப் போயிட்டா எல்லாம் சரியாகிவிடுமா?" நண்பன் செய்ய முனையும் செயலை தடுக்க முற்பட்டான் ரவி.
"ஆகிடும் ரவி..! நான் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லை..! ஒரு வேளை நான் ரொம்ப நாள் காணாமல் போயிட்டா, அடுத்தடுத்து புரளி வெடிக்க ஆரம்பிக்கும்! ஒரு கட்டத்துல நான் இறந்துட்டேன்னு முடிவுப் பண்ணிடுவாங்க!அதை ஒருநாள் இல்லை ஒருநாள் எல்லாரும் நம்பித்தானே ஆகணும்!" என்றான் சர்வ சாதாரமாய்!
"கடவுளே...! சரிடா..மற்றவங்களை விடு! அந்தப் பொண்ணு கங்கா? அதைப்பற்றி யோசித்தாயா?" அடுத்த ஆயுதத்தை எடுத்தான் ரவி.
"எனக்கும் அவளுக்கும் என்னடா இருக்கு? நான் அவளை விரும்புறேன்னுக் கூட அவளுக்குத் தெரியாதே!" ஒரே போடாய் போட்டான் அவன்.
"அவ உன்னை விரும்பி இருந்தால்?" அவன் சுட்டிக்காட்ட, நிகழ்ந்தேறிய நிகழ்வுகள் அனைத்தும் அவன் மனக்கண்ணில் வந்து அவனது வேதனையை பன்மடங்காய் பெருக்கின.