தெரிந்த நாள்… ரேச்சலுக்கு சத்யனை புரிந்து கொண்ட நாள்… !
மறுநாள்… சத்யன் டெல்லி கிளம்பி சென்று விட்டான். தோட்டத்தில் ரஞ்சனையும் நந்தினியையும் தனியே சந்திக்கும் வாய்ப்பு ரேச்சலுக்கு கிடைத்தது. அவர்களிடம் சென்றாள்.
"குட் மார்னிங்"
"குட் மார்னிங்… என்ன விஷயம் ரேச்சல். காரணம் இல்லாமல் என்னிடம் பேச மாட்டாயே" நந்தினி சிரித்தாள்.
"ஆமாம்… காரணம் இல்லாமல் பேசும் நிலையில் நான் இல்லை. இப்போதே வாயாடி… சண்டைகாரி… அப்படினு பட்டம் தர்றாங்க."
அட… சத்யன் சொன்னது இவளுக்கு எப்படி தெரியும். ரஞ்சன் யோசித்தான்.
"இங்க யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க.. நீ பேசுப்பா" நந்தினி சொன்னாள்.
அவளிடம் கல்பி பிரச்சினையை சொன்னாள். அவளுக்கு ஒரு வேலை வேண்டும் என்பதை சொன்னாள்.
"ரேச்சல்… இப்படி ஒருத்தனுக்காக பயந்து கொண்டு வேறு வேலை தேடக் கூடாது. எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும்."
"சரிதான் நந்து. ஆனால் அவளுக்கு அந்த போராட்ட குணம் இல்லை. கார்மேகமும் மூடனாக இருக்கிறான். அவளுக்கு மாமனை மணக்கும் எண்ணம் இருப்பது தெரிந்தும் வம்பு செய்கிறான். வேறு வாய்ப்பு கிடைத்தால் விலகி இருப்பது அவளுக்கு நல்லது."
"கரெக்ட் ரேச்சல் சொல்வதும் சரிதான். கல்பியைப் பொறுத்தவரை அவள் அந்த அளவுக்கு துணிச்சலான பெண் கிடையாது. சும்மா நாம் அவளை தைரியமாக இருக்கனும்னு சொல்லி வசனம் பேசுவதைவிட ஆல்டர்நெட் ஐடியா தருவது பெஸ்ட்" ரஞ்சன் சொல்ல,
"அதுக்காக ஓடி ஒளிந்துக்கோனு சொல்லித் தரக்கூடாது இல்லையா... எங்கே இருந்தாலும் அவள் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்."
நந்தினி ஆதங்கமாக சொல்ல ரேச்சல் குறுக்கிட்டாள்.
'அப்படி சொல்லக்கூடாது நந்தினி. போராட்ட குணம் என்பது ஆழ்மனதில் இருந்து வர வேண்டும். அப்பொழுதுதான் ஆபத்தான சமயங்களில் அந்த உணர்வு நமக்கு கை தரும். அதிலும் கல்பி இப்போது இருப்பது ஆபத்தான சூழல். அவள் தன் வியாபாரத்தை தொடர்ந்தாள் எனில் அந்த கார்மேகம் அவளிடம் வம்பு செய்ய வழி தருவதுபோல ஆகி விடும்.ஆபத்து எப்போ வரும்னு காத்திருப்பதைவிட பாதுகாப்பான இடத்திற்கு செல்வது நல்லது."
"நோ மோர் ஆர்க்யூமென்ட் நந்தினி. கல்பியை நம்மிடம் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மனுகுட்டியை பார்த்துக் கொள்ள… சமையல் செய்ய அவள் உதவியாக இருக்கட்டும். உனக்கு ஓகேயா?" ரஞ்சன் முடித்தான்.