தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 21 - ஜெய்
உங்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்... எல்லா வளங்களும், நலங்களும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்... Wish you all a very very happy and safe Diwali
என்னதான் மைத்தி ஒன்பது ஓவர்கள் கடுமையான பந்து வீச்சை வீசி இருந்தாலும் அவளின் கடைசி ஓவர் தவறிப் போனதுவே இந்திய அணியின் தோல்விக்கு பெரும் காரணமாக அமைய அதையே அனைவரும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தனர்... எப்பொழுதுமே அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிப்பதே மனித குணம்.... இங்கு மைத்தி அந்த குணத்திற்கு இன்னும் நெய் ஊற்றி அந்த குணத்தை அதிகமாக ஒளிர விட்டுவிட்டாள்...
“மைத்தி விதி சொல்றது உண்மையா... அந்த பிளேயர் உன்கிட்ட வந்து பேசினாங்களா...”
“ஆமாம் கோச்... நான் பால் பொஸிஷன் போகும்போதுதான் அவங்க வந்தாங்க... அப்போ அவங்க என்னோட அப்பாக்கு சீரியஸா இருக்குன்னு சொன்னாங்க... நான்கூட அப்போலேர்ந்து உங்கக்கிட்ட சொல்லிட்டு அம்மாக்கு கூப்பிட்டு பேசணும்ன்னுதான் வெயிட் பண்ணிண்டு இருக்கேன்.... நான் இப்போ எங்க அம்மாகூட பேச முடியுமா கோச்....”, மைத்தி கூற பயிற்சியாளர் அவளை கடுமையாக முறைக்க ஆரம்பித்தார்....
இங்கு என்ன விஷயம் நடந்து கொண்டிருக்கிறது... இந்த பெண் ஏன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று இந்திய அணியின் தலைவி யோசித்தாள்... அவளுக்கு மைத்தியின் திறமை பற்றி நன்கு தெரியும்... ரஞ்சியிலியே அவளின் ஆற்றலை கண்டு வியந்திருக்கிறாள்.... இவள் இந்திய அணிக்கு விளையாடினால் நன்றாக இருக்குமே என்று யோசித்திருக்கிறாள்.... ஆனால், ஆண்கள் கிரிக்கெட் போல பெண்கள் கிரிக்கெட்டில் ஆடும் வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை... முடிவுகள் அனைத்துமே மேனேஜர்களாலும், பயிற்சியாளர்களாலுமே எடுக்கப்படும்.... அதே போல் ஆடும் 11-ஐத் தேர்ந்தெடுப்பதும் பயிற்சியாளரே.... மைத்தி தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளால் என்று அறிந்து தலைவி மகிழ்ச்சியே அடைந்தாள்.... அவளின் பந்து வீசும் திறன் அறிந்தே அவளுக்கு முதல் சர்வதேச போட்டி என்றாலும் பத்து ஓவர்கள் முழுதாக வீச பயிற்சியாளரிடம் அனுமதி வாங்கினாள்....
ஆனால் இன்றைய நிகழ்ச்சியால் கிடைத்த வாய்ப்பை இந்தப் பெண் தவற விட்டுவிடுவாளோ என்ற ஆதங்கம் அவளிடம் இருந்தது... தான் ஏதாவது பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று வாயை மூடிக்கொண்டிருந்தாள்..... சில நிமிடங்களுக்கு மேல் அவளாலும் பொறுக்க முடியவில்லை... கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல் சூதை பற்றி நன்கு அறிந்தவள்.... இந்த பெண் இதே போல் பேசிக்கொண்டிருந்தால் கண்டிப்பாக அவளின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை கனவுதான்... புகழில் இருக்கும் வீரர்களையே எந்த அளவு இங்கு ஏற்றி வைக்கிறார்களோ அதை விட வேகமாக இவர்களால் இறக்கி வைக்க முடியும், தன் பதவிக்கு பாதகம் வந்தாலும் பரவாயில்லை என்று மைத்திக்காக பேச ஆரம்பித்தாள் அவளின் தலைவி....