கண்ணன் காரைக் கிளப்பியதும், பத்ரி அழைப்பதையும் பொருட்படுத்தாது சிட்டாக தன் தந்தையை காணப் பறந்தாள் மைத்தி...
மாடிப்படிகளில் தடதடவென்று வேகத்துடன் ஏறி, தங்கள் பகுதிக்குள் நுழைந்து படுக்கையறையில் நுழைய அங்கு தன் தந்தை இல்லாமல் இருக்க, சற்று குழம்பி போனாள்... அதுவும் இல்லாமல் தங்கள் பகுதியே சற்று வித்தியாசமாக இருந்தது.... அங்கிருந்த பொருட்களும் மாறி இருந்தன... தன் பின்னே வந்த பத்ரியை என்ன இது என்பதுபோல் பார்த்தாள் மைத்தி...
“பத்ரிண்ணா அப்பா எங்க... இங்க இருந்த சாமானெல்லாம் மாறி இருக்கு... நீங்க உங்க ரூம்ல வச்சுண்டு இருந்ததெல்லாம் இங்க இருக்கு...”
“மைத்தி உங்க பகுதியை கீழ மாத்தியாச்சு...”
“என்ன சொல்ற பத்ரிண்ணா... மாமிக்கு முட்டி வலி இருக்கறதால, ஏறி இறங்க கஷ்டமா இருக்கும்ன்னுதானே நீங்க கீழே இருந்தேள்... இப்போ ஏன் திடீர்ன்னு போர்ஷன் மாறித்து....”
“நீ கீழ வா... உனக்கெல்லாம் புரியும்....”, பத்ரி பேசியபடியே மைத்தியை கீழே அழைத்து சென்றான்...
கீழே முன்பு தாங்கள் வசித்து வந்த பகுதிக்கு மைத்தியை அழைத்து வந்தான் பத்ரி... அங்கே வாசலிலேயே தன் அன்னையை பார்த்த மைத்தி ஓடி வந்து அணைத்துக்கொண்டாள்...
“அம்மா அப்பா எப்படி இருக்கா... மாமா ஒண்ணுமே சொல்லலை... அப்படியே கூட்டிண்டு வந்துட்டா... அப்பா தூங்கிண்டு இருக்காளா...”, மைத்தி கேட்க கண்ணீர் விட்டபடியே தலையசைத்தார் சியாமளா...
அவரின் முகத்திலிருந்தே ஏதோ தவறாக பட அவசரமாக உள்சென்று பார்த்தாள் மைத்தி... அங்கு தன் தந்தையிருந்த நிலை பார்த்து அதிர்ந்து உட்கார்ந்துவிட்டாள்...
இது தன் தந்தைதானா என்று யோசிக்கும் அளவிற்கு இருந்தது அனந்துவின் உடல்நிலை... தலை முதல் கால் வரை அங்கங்கு கட்டு போடப்பட்டிருக்க, ஆள் கறுத்து, பாதியாக இளைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தார்... கொடுக்கப்பட்டிருந்த வலி நிவாரிணிகளால் தூக்கத்தில் இருந்தார்...
“என்னம்மா இது... அப்பா ஏம்மா இப்படி படுத்துண்டு இருக்கார்... நீ எல்லாம் சரியாப்போயிடுத்துன்னு சொன்னியே... கால் மட்டும் சரியாக நாளாகும்... மத்தபடி ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொன்ன... இங்க பார்த்தா இப்படி தலைலேர்ந்து கால் வரை கட்டு போட்டு வச்சிருக்கா...”, அழுதபடியே கேட்டாள் மைத்தி...
அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் சியாமளாவும் அழ ஆரம்பித்தார்....