ரோபோக்களை பயன்படுத்தலாம் என்பதும், அவைகளை எப்படி கண்ட்ரோல் பண்ணுவது போன்ற தகவல்கள் எல்லாமே ராகவ்வின் மூளையில் பதிவு செய்து வைத்திருப்பதாக தான் என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட எந்த தகவலும் அவனது மூளையில் இல்லை. முதல் தடவை மிகச்சிறிய வயதில் அவன் மூளையில் இருப்பதை அறிய முயற்சி செய்ததால் அவை எல்லாம் அழிந்து போய்விட்டது என்று டாக்டர் கூறிவிட்டார். இதற்கு மேலும் நாம் அவனுக்கு இதே போல ஒரு முயற்சியை மேற்கொண்டால் அவன் இறந்து போய்விட வாய்ப்பிருக்கிறது என்றும் கூறிவிட்டார். அதனால் அந்த முயற்சியை முழுவதும் கைவிட்டு விட்டோம்.
ஒருவேளை அவர் பொய் சொல்லியிருக்கலாம் அல்லவா... நாம் வேறு யாரிடமாவது முயற்சி செய்து பார்க்கலாம் அல்லவா...
அவர் நம்பிக்கைக்குரியவர்... அவனை சிறுவயதில் இருந்தே அவரிடம் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதுபோக இதேபோல மெமரியில் இருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும் டாக்டர்கள் அநேகர் இல்லை. அமெரிக்கா லண்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம் இதை வேறு யாரிடமாவது இந்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தினால் அதற்கு நிறைய பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இந்த சிகிச்சையை அதோடு நிறுத்திக் கொண்டோம்.
ஆனால் இப்பொழுது எனக்கு அந்த பார்முலா மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அதை எப்படியாவது நான் சீக்கிரமாக கண்டுபிடித்தாக வேண்டும். அதை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள் என்றான் பிரதாபன்.
அவர்களா.... அழித்துவிடுவார்கள்... அண்ணா யாரைச் சொல்கிறீர்கள்.
அது ஒரு பெரிய கதை சத்யா... நான் ஒரு தீவிரவாத கும்பலுக்கு இந்த ரகசியத்தை தருவதாக சொல்லி கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டேன். அவர்கள்தான் நமக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறார்கள். இப்பொழுது அவர்கள் இந்த கோடிங்கை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். இப்போது நாம் அவர்களிடம் கோடிங்கை கொடுக்கவில்லை என்றால் என் தொழில் சாம்ராஜ்ஜியம் முழுவதையும் தவிடுபொடி ஆக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். அதனால்தான் என்றான் ஒரு பெருமூச்சுடன்...
பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க அந்த இடத்தில் ஒரு பெரிய நிசப்தம் நிலவியது. அந்த அமைதியை கெடுக்கும் விதமாக சத்யாவின் செல்போன் அலறியது.
வேகமாக எடுத்து பார்த்தவன் சொல்லு மல்லி... என்றவாரே அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றான்.