அந்த அறையில் வெளியே செல்ல எங்குமே கதவுகள் இல்லாததால் அங்கிருந்து மீண்டுமாக மெதுவாக அடியெடுத்து வைத்து முன்னேறினாள் குயிலி. யாரோ இருவர் பேசிக் கொள்ளும் சத்தம் அடுத்த அறையிலிருந்து குயிலின் காதில் தெளிவாக விழுந்தது.
அந்த அறையை தாண்டி அந்த வீட்டை விட்டு வெளியேறுவதற்கான கதவு இருப்பதையும் கண்டு கொண்டாள் குயிலி.
பின்புறமாக திரும்பி ஆசிர்வாதம் தாத்தாவிடம் தன் உதடுகள் மேல் கையை வைத்து ஷ்சு என்று எச்சரித்து விட்டு மெதுவாக சத்தம் கேட்ட அறையின் வாசலை கடந்து முன்னேறினாள் குயிலி.
இருவரும் அந்த அறையை கடந்து சென்றதும் மீண்டுமாக ஒருவரையொருவர் பார்த்து வெற்றி புன்னகையை உதிர்த்து கொண்டனர்.
வாசல் அருகே வந்த குயிலியின் மனது ஏனோ அறைக்குள் இருந்து பேசிய நபர்களை பார்க்க வேண்டும் என்று தூண்ட அந்த அறையின் திரைச்சீலையை மெதுவாக சிறிது விலக்கி விட்டு அவர்கள் பார்க்காத வண்ணமாக அந்த அறையை நோட்டம் விட ஆரம்பித்தாள்.
அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி குயிலியின் பார்வையில் பட்டாள். யோசிக்கவே நேரம் எடுக்காமல் அந்தப் பெண்மணி யார் என்பதை கண்டு கொண்டாள் குயிலி. இவள்தான் அன்று ஆசிர்வாதம் தாத்தாவின் கழுத்தில் கத்தியை வைத்து இருந்தவள்... அப்படியென்றால் எதிரில் அமர்ந்திருக்கும் அந்த ஆண் யார் என்று மீண்டுமாக உற்றுப்பார்த்தாள் குயிலி.
அந்த ஆணின் முகம் சரியாக தெரியாததால் எப்படியாவது பார்த்து விட வேண்டும்என்று காத்திருந்தவள் கண்களில் கண்ணாடி மீது தெரிந்த பிம்பம் தெளிவாக பட்டது. கண்ணாடியில் அந்த ஆணின் பிம்பத்தை பார்த்த குயிலி ஒரு நொடி திகைத்து விட்டாள்.
அவள் மூணாறில் அந்த ரகசியங்களை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் பொழுது நடந்த சம்பவத்தில் இருந்து ஒவ்வொன்றாக ரீவைண்ட் பண்ணி பார்க்க ஆரம்பித்தாள் குயிலி.
எல்லாவற்றையும் திரும்ப யோசித்து பார்க்க அவளுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. அதோடு அதற்குள் ஒளிந்திருக்கும் ரகசியத்தை புரிந்து கொள்ளவும் அவளுக்கு நேரம் தேவைப்படவில்லை.
கார்த்திக் யூ ஆர் சீட்டர்...ஐ ஹேட் யூ என்று கத்தினாள்.. இல்லை இல்லை... அலறினாள் என்றே சொல்லலாம். அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம்.
கோபத்தில் உதடுகள் துடிக்க கண்கள் சிவக்க அருகில் இருந்த ப்ளவர்வாஸை தட்டி விட அது நொருங்கி அவளின் கோபத்தை மற்றவர்களுக்கு உணர்த்தியது.