தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 07 - முகில் தினகரன்
“எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!” என்று அறை வாசலில் நின்று சன்னக் குரலில் நாசூக்காக கேட்ட இளைஞனை
“ம்..உள்ளார வாங்க!” என்றாள் விஸ்வா டவர்ஸின் அட்மினிஸ்ட்ரேஷன் மேனேஜர் கல்பனா.
வந்தவன் “மேடம்...இங்க செக்யூரிட்டி வேலைக்கு ஆள் தேவைப் படுதுன்னு ஏ.சி.தீனதயாள் சார் சொன்னாரு...”
“ஓ..அப்படியா?...கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க!” என்று சொல்லி அந்த இளைஞனை விசிட்டர்ஸ் சோபாவில் அமர வைத்த அந்தக் கல்பனா, தொலைபேசியில் காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவத்தை அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.
அந்த இடத்தையே ஆக்கிரமித்திருந்த செண்ட் வாசம் அவளிடமிருந்துதான் வருகின்றது என்பதை உணர்ந்த அந்த இளைஞன்,
“சம்பளத்துல பாதியை பெர்ஃப்யூம் வாங்கவே செலவு பண்ணுவா போலிருக்கு!” என உள்ளுக்குள் நினத்துக் கொண்டான்.
“ஓ.கே! சார்...நானே இண்டர்வியூ பண்ணி...சூட்டபிளா இருந்தா நானே அப்பாயிண்ட் பண்ணிடறேன் சார்!” என்று போனில் சொல்லி விட்டு,
போனை வைத்தவள் சோபாவில் அமர்ந்திருந்த அந்த இளைஞனைப் பார்த்துக் கையசைத்தாள்.
அவள் அழைப்பைப் புரிந்து கொண்ட அவன், எழுந்து அவள் மேசையருகே வந்தான்.
“உட்காருங்க மிஸ்டர்.........?” அவள் யோசனையுடன் இழுக்க,
“முகிலன் மேடம்!” என்றான்.
“யெஸ்...உட்காருங்க மிஸ்டர்.முகிலன்!”
உட்கார்ந்தான்.
செண்ட் வாசம் மூக்கைத் துளைத்து மனதை வருடி, கனவில் மிதக்கச் செய்தது. “ஆம்பளகளை மயக்கறதுக்காகவெ செண்ட் போடுவாளுகளோ?”
“நீங்க டைரக்டா வந்திருக்கீங்களா?...இல்லை ஏதாவது செக்யூரிட்டி சர்வீஸ் மூலமா வந்திருக்கீங்களா?” கல்பனா கேட்டாள்.
“மேடம்!...ஆக்சுவலா...நான் இதுக்கு முன்னாடி செக்யூரிட்டி வேலை பார்த்தது கிடையாது!...இங்க நடந்த சில விஷயங்களைப் பற்றி எனக்குச் சொன்ன ஏ.சி.தீனதயாள் சார்தான் என்னைய இங்க செக்யூரிட்டியா ஜாய்ன் பண்ணச் சொன்னார்!...அதனால வந்திருக்கேன்!” முகிலன் தெளிவாகச் சொல்ல