“ஓ!...ஏ.சி.சார் சொன்னதுனால வந்திருக்கீங்க?...அப்படித்தானே?” தலையைச் சாய்த்துக் கொண்டு அவள் கேட்க,
“நோ...மேடம்!...பொதுவாகவே நான் ஒரு அட்வென்ச்சர் விரும்பி!...அமானுஷயங்களை ஆராய்ச்சி பண்றது என்னுடைய ஹாபி!...இங்க நடந்த சில த்ரில்லிங்கான விஷயங்கள் எனக்குத் தெரிய வந்ததுக்குப் பிறகுதான் எனக்கு இந்த வேலையிலேயே ஆர்வம் வந்தது!...நீங்க மட்டும் ஓ.கே சொன்னா...நாளைக்கே வந்து வேலைல ஜாய்ன் பண்ணிடுவேன்!”
அவன் ஆர்வத்தைப் பார்த்து மெலிதாய்ப் புன்னகைத்த கல்பனா தொலைபேசியில் மறுபடியொரு முறை ஓனரைத் தொடர்பு கொண்டு பேசி விட்டு
“ஓ.கே.மிஸ்டர் முகிலன் நீங்க நாளைக்கு வந்து ஜாய்ன் பண்ணிடுங்க!...ம்ம்ம்...அப்புறம்...இங்க பனிரெண்டு மணி நேர வேலை...நைட் டியூட்டி மட்டும்தான்!...அதாவது எய்ட் டூ எய்ட்!...யூனிஃபார்ம்...ஷூ...விஸில்...டார்ச் லைட்...லத்தி...எல்லாம் குடுத்திடுவோம்...வேற ஏதாவது வேணும்னா இப்பவே சொல்லிடுங்க!” என்றாள்
“ஆமாம் குட்டி, சும்மா “நச்”சுன்னு மாமாவுக்கு ஒரு “இச்”வேணும் குடுப்பியா?” கிசுகிசுக்குரலில் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
“என்ன...என்ன வேணும்?” அவள் கேட்க
“இல்லை மேடம்...எதும் வேண்டாம்!” என்றான் வழிந்து கொண்டே.
“ஓ.கே.நீங்க இப்பக் கிளம்பலாம்!” என்று அவள் சொன்னதும் “தாங்க்ஸ் மேடம்” சொல்லி விட்டு இரண்டடி நகர்ந்தவன் மறுபடியும் திரும்பி “மேடம்...நீங்க பேய் இருக்குன்னு நம்பறீங்களா?” சன்னக் குரலில் கேட்டான்.
“விருட்”டென்று தலையைத் தூக்கி அவனை ஊடுருவிப் பார்த்த கல்பனா
“மிஸ்டர்...இந்த மாதிரி அனாவசியப் பேச்செல்லாம் என்கிட்டே வெச்சுக்க வேண்டாம்!...ஐ ஆம் அட்மினிஸ்டிரேஷன் மேனேஜர் ஹியர்...!”
“ஓ.கே...ஓ.கே...” சொல்லி விட்டு எழுந்து வாசல் வரை சென்றவன் மீண்டும் திரும்பி வந்து “ஒரு ரெக்வஸ்ட்” என்றான்.
“ம்” என்றாள் அவள் கடுப்புடன்
“நான் இந்த பில்டிங்கை ஒரு முறை சுத்திப் பார்த்திட்டுப் போகலாமா?”
“எதுக்கு?” அவள் ச்ந்தேகமாய்க் கேட்க
“பகல்ல ஒரு தடவை பார்த்திட்டா நல்லதுன்னு தோணிச்சு...அதான்!”
“ம்ம்ம்...ஓ.கே!” என்றாள்.