ஆனால் இப்போதோ தன் மகனை பார்க்கப் போகவேண்டும். இதற்காகவே தவம் இருந்தவள், இது எல்லாமே ஒரு கனவு போலவே உணர்ந்தாள்...
தான் எவ்வளவு அறிவீனமாய் இருந்திருக்கிறாள், இப்போதெல்லாம் பெண்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது, தான் ஒரு முட்டாளாய் அவனிடம் மயங்கி தன்னை இழந்து ஒரு குழந்தையையும் பெற்று அவனை அனாதையாக்கி, சே என்ன பெண் நான், என்னை கூட கவனித்துக் கொள்ளத் தெரியாமல் வளர்ந்து விட்டேன். இப்போ அவன் எங்கே போனான் என்று கூட தெரியாமல்... ' என்று தன்னையே நொந்து கொண்டாள் வீட்டிற்கு போகும் வழியில், மணி ஆகிவிட்டதென்று ஆட்டோவில் சென்றாள், இனி கவனமாக இருக்க வேண்டும், அனாவசியமாக ஆட்டோவிற்கெல்லாம் செலவு செய்யக் கூடாது, என்று முடிவு செய்தாள்.
வீட்டிற்கு வந்தவுடன் " என்னம்மா இவ்வளவு லேட்டாகத்தான் எப்பவும் வருவீங்களா? நான் பயந்துவிட்டேன்." என்றான் அவள் மகன்.
"இல்ல அஜய் இன்னும் லேட்டாகும், உனக்காகத்தான் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கேன்!" என்றாள் தனம்.
இப்படியே சந்தோஷமாக ஓடியது அவர்களின் வாழ்கை, மூன்று வருடம் ஓடியது தெரியவில்லை, எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து நல்ல மார்க் வாங்க தன்னால் முடிந்த வகையில் கவனித்தாள். அஜய் எப்போதுமே முதல் ரேங்க் தான், அவளுக்கு ஆது சொல்வதே ஞாபகம் வரும், ' எப்பவும் நீயே முதல் ரேங்க் வாங்கறியே, நானும் எப்பவாவது, உன்னை தோற்கடிச்சு முதல் ரேங்க் வாங்கனும்னு நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை என்று'
தன் மகன் அஜயும் அவனுடைய நண்பர்களும் பன்னிரெண்டாவது, பரீட்சை முடிந்து ரிசல்டுக்கு காத்திருக்கிறார்கள்.
அப்துல் தங்கள் ஊருக்கு போய் தனத்தை பற்றி ஏதாவது தெரியுமா என்று பார்த்தான், தனக்கு தெரிந்த சில பேரை பார்த்தான், மணியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, சும்மா எல்லா பிரெண்டசை பற்றி கேட்கும் போது தனத்தை பற்றியும் கேட்டான்.
" ஐயோ அவள் பன்னிரெண்டாவது முடித்தவுடன் மேல் படிப்பு படிக்கப் போறேன் என்று ஊரை விட்டு போய்விட்டாள், அவங்க அம்மாவும் அப்பாவும் போகக் கூடாது என்றார்கள். நான் வேலை செய்து படிக்கிறேன் என்று போய்விட்டாள், நம்ம கணக்கு டீச்செர்தான் உதவி செய்தங்க அவளுக்கு," என்றான்.
" அப்படியா எந்த ஊருக்கு போனா தெரியுமா?"
" கோயம்பதூர் என்று நினைக்கிறேன், எவ்வளோ வருஷம் ஆயிடுத்து, இப்போ கேக்றே? "