தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 06 - விஜேஜி
அன்று, அஜயை பாடச் சொல்லி கேட்டு கொண்டிருந்தாள், அவளுக்கு அப்துலின் நினைவு. அந்த நினைவில் தன்னை மறந்து தன் மகனுடன் பாட்டில் சேர்ந்து கொண்டாள், அஜய்க்கு ஆச்சர்யம், ஆனால் நிருத்தாமல் பாடினான், அவர்கள் பாடிகொண்டிருக்கும் போது நிக்கத் வந்துவிட்டார்.
" இவ்வளவு அழகா பாடுறியே அதான், உன் மகனுக்கும் அதே ஞானம் வந்திருக்கு!" என்று கூறி விட்டு, வீட்டுக்கு சென்று ஜாஃபரிடம் சொல்லி அடுத்த நாளே அவர் அவளைக் கூப்பிட்டு,
"என் ஆபிசுக்கு வா உன்னுடன் கொஞ்சம் பேசணும்" என்றார்.
இவள் அவர் ஆபிசுக்கு போனவுடன்
"வா தனம்மா, உனக்கு இன்னிக்கு ஆடிஷன் " என்று அவளிடம் கூறினார்.
உடனே அவளைப் பாட சொல்லிக் கேட்டு, டெஸ்ட் செய்து உடனே ஓகே யும் செய்து விட்டார், அடுத்த நாளே பாடல் ரெக்கார்டிங் என்று சொல்லி விட்டார்.
அப்போதிலிருந்து, எந்த ஒரு புதுப் படம் வந்தாலும் ஒரு பாடல் தனத்துக்கும், அஜய்க்கும் கொடுப்பார். அதோடு மற்ற இசையமைப்பாளர்களுக்கும், இவளைப் பற்றி சொல்லி வைத்தார், எல்லோருக்கும் அவளின் குரல் மிகவும் பிடித்திருந்தது.
அவளுக்குப் பொழுது போக்காக தான் வேலையில் சேர்ந்தவுடன், முதலில் பாட்டு கிளாஸ் சேர்ந்து முறையாக கற்றுக் கொண்டது, அவளுக்கு மிகவும் எளிதாக இருந்தது.
அங்கிளுக்கும், நிக்கத் ஆண்டிக்கும், அவளைப் பற்றி முழுவதுமாக தெரிந்திருந்தாலும், அஜயின், அப்பாவைப் பற்றி அவர்களும் ஒன்றும் கேட்கவில்லை, தானும் ஒன்றும் சொல்லவில்லை.
இனி அவர்களிடம் ஹெல்ப் கேட்க வேண்டும், அவனை எப்படி தேடுவது என்று தெரியவில்லை. அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா, இல்லையா, தன்னை நினைவிருக்குமா,, தனக்காகக் காத்துக் கொண்டிருப்பானா, என்று பலவிதமாக யோசித்துக் கொண்டாள்.
"என்னம்மா மறுபடியும் கனவா? அப்பாவைப் பற்றிதானே?"
"கண்டிப்பாக உங்க அப்பாவைப் பற்றிதான், எங்கேயிருக்கிராரோ, எப்படியிருக்கிறாரோ? என் ஞாபகம் இருக்குமோ இல்லையோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன் "
"சரி இப்பவே எதுக்கு கவலை, அவரை பார்க்கும் போது இத்தனை கேள்வியும் கேள்!" என்று கூறி, "ஏம்மா, அப்பாவும் நீயும் நல்ல பிரெண்ட்ஸ் தானே, அப்படியிருக்கும் போது, அவரால எப்படி உன்னை மறக்க முடியும் சொல்லு?"
"கரெக்ட் தான், ஆனா, நான் ஸ்கூல் முடிக்கும் வரை வரவேயில்லையே?"