முரளி சொன்னான். “அய்யா...தன்னோட வருங்கால மனைவிக்கு தானே தன் கையால ஒரு பத்திரிக்கை குடுக்கணும்!”னு ஆசைப்பட்டான்!...நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன்!... “உங்க வீட்டுப் பெரியவங்களோட வந்து...இந்த வீட்டுப் பெரியவங்களுக்கு பத்திரிக்கை வைக்கறதுதான் மரியாதை”ன்னு!...அதுக்கு இவன், “பெரியவங்க வந்து பெரியவங்களுக்கு வைக்கட்டும்!...நான் கட்டிக்கப் போற மனைவிக்கு நான் வைக்கறேன்!”னு என் கிட்ட வாக்குவாதம் பண்ணி என்னை இங்கே கூட்டிட்டு வந்திட்டான்!...வரும் போது நல்லா வீராப்பாத்தான் பேசினான்..இங்க வந்ததும் சுத்தமா வெட்க ராஜாவாயிட்டான்” சொல்லி விட்டுச் சிரித்தான் முரளி.
பக்கத்தில் அமர்ந்திருந்த தனசேகர் முரளியின் தொடையில் மெல்லமாய் அடித்து, “டேய்...சும்மாயிருடா...போட்டுக் குடுக்காதடா” என்றான்.
தனசேகர் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து போன ராமலிங்க பூபதி, “ஹா...ஹா...ஹா...” என்று வில்லத்தனமாய் சிரித்து விட்டு,
“மாப்பிள்ளை ஆசைப்பட்டதுல என தப்பிருக்கு?...தாராளமாய் அவர் அவரோட வருங்கால மனைவிக்கு பத்திரிக்கை வைக்கட்டும்...நாங்க ஒண்ணும் சங்கடப்படவோ...மறுத்துப் பேசவோ மாட்டோம்” என்றவர்,
சட்டென்று குரலைத் தாழ்த்திக் கொண்டு, “இவராவது பத்திரிக்கை குடுக்கறதுக்காக வந்தார்...அந்தக் காலத்துல நானெல்லாம் வேற ஒண்ணுக்காக பொண்ணு வீட்டுக்குப் போனோன்” என்று சொல்ல,
சொர்ணம், “ச்சூ...சும்மாயிருங்க” என்றாள் வெட்கத்துடன்.
அப்போது மெல்ல மெல்ல நகர்ந்து முரளியின் அருகே வந்து நின்ற அந்த மூதாட்டி, அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு, “நீ மாப்பிள்ளைக்கு சிநேகிதனாப்பா?...”கேட்க,
முந்திக் கொண்டு பதில் சொன்னான் தனசேகர், “வெறும் சிநேகிதனில்லை பாட்டி!...உயிர் சிநேகிதன்…ஒண்ணாங் கிளாஸிலிருந்து ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு””
“ஓ...”என்ற கிழவி, “ஆமாம்...நீ யாரு பையனப்பா?...எந்த வம்சமப்பா?” கேட்டாள்.
“பக்”கென்று அதிர்ந்து போனான் முரளி. அவன் முகம் ஒரே வினாடியில் சுண்டிப் போனது.
சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தனசேகர், அதைச் சமாளிக்கும் விதமாய், “ஆத்தா...இவன் நம்ம ஊருதான்!...அவன் என்ன வம்சமாயிருந்தான் என்ன?...என் கூட சின்ன வயசிலிருந்தே ஒண்ணாப் படிச்சவன்!...கிட்டத்தட்ட இருபத்தி அஞ்சு வருஷமா நாங்க ரெண்டு பேரும் நண்பர்கள்!..அவ்வளவுதான்!” என்றான்.
“அதெல்லாம் செரி!...உங்க ஊருல இவன் எந்த தெரு?...இவங்க அப்பன் பேரு என்ன?” விடாமல் கேட்டாள் கிழவி.