நிற்கணும்?...”
“இல்லை முரளி...அந்த வீட்டில் அந்த கிழவி...என் வருங்கால மாமனார்...அத்தை...எல்லோருமே சொல்லி வெச்ச மாதிரி...ஒரே பாணிலதான் பேசினாங்க!...அதாவது... “இவன் ஆகாது”...என்கிற மாதிரிதான் பேசினாங்க!...இதை வெச்சுப் பார்க்கும் போது அந்தப் பொண்ணு மல்லிகாவும் அதே மாதிரித்தான் பேசும்!னு தோணுது!...அவ மட்டும் அப்படிப் பேசினா....?” சொல்லி விட்டு பற்களை “நா...நற”வென்று கடித்தான்.
“பேசினா?...சொல்லுடா...பேசினா என்ன பண்ணுவே?” கோபமாய்க் கேட்டான் முரளி.
“தாலி கட்டறதுக்கு முன்னாடியே அப்படிப் பேசினா...தாலியைக் கட்ட மாட்டேன்!...தாலி கட்டின பிறகு பேசினா...நான் கட்டிய தாலியை நானே அறுத்து வீசிடுவேன்!” கண்களில் கோபம் கொப்பளிக்கச் சொன்னான் தனசேகர்.
தன் தலையை இட, வலமாய் ஆட்டிய முரளி, “இல்லைடா சேகர்...நீ பேசறது தப்பு!...நட்பு வேற...உறவு வேற!...நண்பன் என்பவன்...இப்ப உன் கூட இருப்பான்!...நாளைக்கு வாழ்க்கைச் சூழ்நிலைகள் மாறும் போது...இருப்பான்!னு உறுதியா சொல்ல முடியாது!...ஆனா தாலி கட்டிய மனைவி என்பவள் அப்படியில்லை!...நீ இந்த உலகத்துல இருக்கற வரைக்கும்...உன் கூட்த்தான் இருப்பா!” என்று சொல்ல,
அவனைக் கையமர்த்திய தனசேகர், “டேய் முரளி...பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த அந்த நிகழ்ச்சியை நீ மறந்திட்டியா?” தலையை இடது புறமாய்ச் சாய்த்துக் கொண்டு கேட்டான்.
“எந்த நிகழ்ச்சி?” புருவங்களை நெரித்துக் கொண்டு கேட்டான் முரளி.
“புறா பிடிக்க...பாழுங் கிணற்றுக்குப் போனோமே?...நான் சாகப் போனேனே?...மறந்திட்டியா?”
முரளியின் கண்களில் அந்தக் காட்சிகள் விரிந்தன.
*****
காலை பதினோரு மணியிருக்கும், ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொண்டு தெருவில் நடந்தனர் பதிமூன்று வயது தனசேகரும், முரளியும்.
தெருவில் கிடந்த அந்த தகர டப்பாவை முரளி உதைக்க அது பத்தடி உருண்டு போய் நிற்க, பத்தடி நடந்ததும் அதை தனசேகர் உதைக்க...அது இன்னும் பத்தடி உருண்டு நிற்க, அடுத்து முரளி உதைக்க...
படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது அந்த தகர டப்பா. தெருவில் உருளும் போது அது எழுப்பிய ஓசை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது. மற்றவர்களின் அந்த முகச்சுளிப்பு அவர்கள் இருவரையும் மகிழ வைத்தது.
“ஏண்டா பசங்களா...சும்மா போக மாட்டீங்களா?...அதை எதுக்குடா உதைச்சு...சத்தம் எழுப்பறீங்க?” பெட்டிக் கடையில் பீடி உறிஞ்சிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் கேட்டார்.