தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 08 - முகில் தினகரன்
அன்று மதியத்திலிருந்தே வீட்டிலுள்ள மேஜை, பீரோ, அலமாரிகள், நாற்காலிகள் போன்ற பெரிய பொருட்களையெல்லாம் ஒரு வண்டி பிடித்து, அதிலேற்றி....அடுத்த தெருவிலிருக்கும் பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, கடைக்காரன் கொடுத்த தொகையை மறு பேச்சின்றி வாங்கிக் கொண்டு வந்தான் முரளி.
“டேய்...முரளி...என்னடா பண்றே?...ஏன் வீட்டு சாமான்களையெல்லாம் கொண்டு போய் விற்கிறே?...என்னாச்சு உனக்கு?” அவன் தாய் ராக்கம்மா கேட்க,
“அம்மா...இன்னிக்கு ராத்திரி ரயில்ல நாம இந்த ஊரை விட்டே கிளம்பப் போறோம்...” என்றான் அதிரடியாய்.
விக்கித்து நின்றாள் ராக்கம்மா. அவள் கை அவளையுமறியாமல் நெஞ்சைத் தொட்டது..
“டேய்...என்னடா சொல்றே?...காலங்காலமா...உங்க அப்பன்...தாத்தன்...பாட்டன்...பூட்டன்...எல்லோரும் பொழைச்ச ஊருடா இது!...இதை விட்டுப் போறதுன்னா...எப்படிடா?...நமக்கு வெளி உலகத்துல யாரைடா தெரியும்?...எங்க போயி...என்ன பண்ணப் போறோம்?” அச்சத்தோடு கேட்டாள்.
“அம்மா... “ஒரு கிணற்றுக்குள் உட்கார்ந்து வானத்தைப் பார்த்தா...அந்தக் கிணற்றோட சுற்றளவுக்குத்தான் வானம் தெரியும்!...அந்தக் கிணத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் விரிந்த வானம் மொத்தமும் தெரியும்!”...நாம இத்தனை நாளா கிணற்றுக்குள்ளார உட்கார்ந்திட்டிருந்தோம்...இனி வெளிய போயி பெரிய உலகத்தைப் பார்ப்போம்” என்றான்.
அவனுடன் மேற் கொண்டு பேச இயலாதவளாய் ராக்கம்மா வாயடைத்து நிற்க, முரளியின் தங்கை வசந்தி அவனருகில் வந்து, “அண்ணா...இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?ன்னு தெரிஞ்சுக்கலாமா?” நாசூக்காய்க் கேட்டாள்.
தங்கை கேட்ட தன்மையான முறையும், தன் நெஞ்சின் பாரத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்று காத்திருந்த தன் மனநிலையும், அவனைப் பேச வைக்க, தனசேகருடனான தன் நட்பு அவன் திருமணத்தையே பாதித்து விடும் என்கிற நிலைக்குப் போய் விட்டதைச் சொன்னான்.
“நீ அந்தக் கல்யாணத்துக்குப் போறதுதான் பிரச்சினைக்கு காரணம்ன்னா...கல்யாணத்துக்குப் போகாம இருந்திடு!...அவன் கூடப் பேசிப் பழகறதுதான் பிரச்சினைக்குக் காரணம்ன்னா...அதையும் நிறுத்திடு!...இதுக்காக நாம ஊரை விட்டுப் போகணும்!னு என்னண்ணா அவசியம்?” தங்கை வசந்தி கேட்டாள்.
“அம்மா...எங்களோட இருபத்தி அஞ்சு வருஷ நட்பு வஜ்ரம் மாதிரியான நட்பும்மா...!...எங்க ரெண்டு பேராலும் அதை விட்டு விட முடியாது!...நான் அவன் கல்யாணத்துப் போகாம இருந்தா