(Reading time: 7 - 13 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

சில முக்கியமான பொருட்களையும் மட்டும் பெரிய பெரிய  பைகளில் அடைத்துக் கொண்டு, ஆளுக்கு இரண்டு பைகளாகத் தூக்கிக் கொண்டு, இரவு பத்தரை மணி ரயிலைப் பிடிக்க,  ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தனர்.

“மணி என்னாச்சுப்பா?” ராக்கம்மா கேட்க,

“பத்து...பத்து” என்றான் முரளி.

“பத்தரைக்குத்தான் ரயில் வரும்!...வாங்க அந்த சிமெண்டு பெஞ்சில் உட்காருவோம்” என்ற ராக்கம்மா, தன்னுடைய இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு சிமெண்டு பெஞ்சை நோக்கி நடந்தாள்.

முரளியும், அவன் தங்கையும் உடன் நடந்தனர்.

சொந்த மண்ணைப் பிரியும் சோகம் ராக்காம்மாவின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

யாருமே வராத அந்த ரயில் நிலையத்தில் யாரோ சிலர் ரயிலுக்காகக் காத்திருப்பதை தூரத்திலிருந்து கவனித்த ஸ்டேஷன் மாஸ்டர் அவர்களை நோக்கி நடந்து வந்தார்.  அருகில் வந்ததும் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு,

“என்னப்பா முரளித் தம்பி...மூணு பேருமா எங்க கிளம்பிட்டீங்க?...உறவுக்காரர்கள் வீட்டு விசேஷமா?” கேட்டாள்.

எழுந்து அவரருகே சென்று நின்ற முரளி, “இல்லை சார்!...நாங்க...நாங்க...இந்த ஊரை விட்டே போறோம் சார்!” என்றான்.

அதைக் கேட்டு அதிர்ந்து போன ஸ்டேஷன் மாஸ்டர், “ஏன்?..என்ன பிரச்சினை?” அக்கறையோடு கேட்டார்.

“அது...வந்து...எனக்கு வெளியூர்ல வேலை கிடைச்சிருக்கு!...அதான் கிளம்பிட்டோம்” என்றான்.  பொய் சரளமாய் வந்தது.

“அப்படியா?...சந்தோஷம்!...எந்த ஊரு?”

“திருச்சி” சற்றும் யோசிக்காமல் அடுத்த பொய்யையும் சொன்னான்.

“சரி...பார்த்து பத்திரமா போங்க!..இன்னும் அஞ்சு நிமிஷத்துல வண்டி வந்திடும்” சொல்லி விட்டு ஸ்டேஷன் மாஸ்டர் சென்றதும் ராக்கம்மா மகனிடம் கேட்டாள்  “முரளி...ஏம்பா...அவர் கிட்ட பொய் சொன்னே?”

“இல்லைம்மா...நிச்சயம் என்னைத் தேடி தனசேகர் நம்ம வீட்டுக்குப் போவான்!...வீடு பூட்டிக் கிடப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்துல விசாரிப்பான்!...அவங்க “நாம ஊரை விட்டே போயிட்டோம்”னு சொன்னா...நேரா இந்த ரயில்வே ஸ்டேஷனுக்குத்தான் வருவான்!...வந்து ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட விசாரிப்பான்!..அவர் ஊரைச் சொன்னதும்...நேரா அங்க கிளம்பி வந்திடுவான்!...அதான் பொய் சொன்னேன்!” என்றான் முரளி.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.