தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 10 - பிந்து வினோத்
ஜோதி சொல்வதும் சரி தான் என்று மஞ்சுவிற்கு தோன்றியது.
வினோதினியும் ஷண்முகமும் பொதுவாக எல்லாவற்றையும் தங்களுக்குள் பேசி திட்டமிட்டு செய்வதை அவளும் கவனித்திருக்கிறாள். ஜோதிக்கு ஃபேர்னஸ் க்ரீம் வாங்கிய நாட்களில் கூட, வாங்கும் வேலையை வினோ செய்தாலும், அதை ஜோதியிடம் கொடுப்பது ஷண்முகம் தான்... வீடு, குடும்பம் சம்மந்தப்பட்ட வேறு எந்த விஷயமாக இருந்தாலும் வினோதினி ஷண்முகமிடம் தான் சொல்வாள்... அதை சொல்வது, செயலாற்றுவது ஷண்முகமாக இருக்கும்...
ஷண்முகமும், வினோதினியும் முதலிலேயே குழந்தைக்கு பெயர் தேர்வு செய்திருந்தால் கட்டாயம் ஷண்முகமே அதை நிர்மலாவிடம் சொல்லி இருந்திருப்பான்...!
“வினோவோட குழந்தை... அதும் முதல் குழந்தை... அவங்களே பேர் செலக்ட் செய்யனும்னு ஆசைப் பட்டிருந்திருப்பாங்க... அது நார்மல் தானே...” என்றாள் மஞ்சு வினோதினியை விட்டுக் கொடுக்காமல்.
ஜோதி இந்த தடவை உடனே பேசவில்லை. சில வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு,
“எனக்கும் அவங்களை குறை சொல்ற ஆசை இல்லை அண்ணி. அவங்க தனியா போகனும்னு நினைக்குறதைக் கூட தப்புன்னு சொல்ல மாட்டேன்... ஒருவேளை அண்ணனும் அவங்க சொன்னதுக்கு சரின்னு சொல்லி இருந்திருந்தா எல்லாம் சுமுகமா போயிருந்திருக்கும். இப்போ... ப்ச்... வீட்டுல எல்லாமே தப்பா நடக்குது...” என்றாள் கவலையுடன்.
“எனக்கு ஒன்னும் புரியலை ஜோதி?”
“அண்ணன் குழந்தைக்கு அப்பா பேர் வைக்கலைன்னு அம்மாக்கு வருத்தம் தான். ஆனால் அவங்க யார் கிட்டேயும் எதுவும் கேட்கலை. அண்ணியும் குழந்தையும் இங்கே வீட்டுக்கு திரும்பி வரதா இருந்த நாள்ல வரலை, அண்ணனும் சரியா பதில் சொல்லலை... அப்புறம் ஒரு நாள் திடீர்னு அவங்களே வந்தாங்க... அப்போ இருந்து எப்போவும் இரண்டுப் பேரும் சண்டைப் போட்டுட்டே இருந்தாங்க. கடைசியா அம்மா என்ன தான் நடக்குதுன்னு கேட்டப்போ, அண்ணி தனிக்குடித்தனம் போகனும்னு சொன்னாங்க. அண்ணன் நான் வர மாட்டேன்னு சொல்ல, ரொம்ப பெரிய ஆர்க்யுமென்டா போச்சு...”
“அந்த சண்டை டைம்ல வினோ ஏன், எதுக்குன்னு எல்லாம் சொல்லலையா???”
“எனக்கு ரொம்ப தெளிவா தெரியலை... புரிஞ்ச வரைக்கும்னு பார்த்தா, அண்ணியோட அம்மா வீட்டுல ஏதோ பிரச்சனை. அதையும் இங்கேயும் லிங்க் செய்து சொன்னாங்க. அப்புறம்...” என்று மேலே சொல்லாமல் தயங்கினாள் ஜோதி...
“என்ன???”