“வேண்டாம் மஞ்சு... நாம இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேண்டாம்... நான் யார் கிட்டேயும் பேசுறதா இல்லை... உன்னை ஃபிரென்ட்ன்னு நினைச்சு பேசினேன்... அது தப்புன்னு இப்போ புரிஞ்சிருச்சு...”
வினோதினியின் குரலில் இருந்த பிடிவாதத்திற்கான காரணம் மஞ்சுவிற்கு புரியவில்லை... வினோவின் மனமாற்றத்திற்கு பின்னால் வேறு ஏதோ பெரிய விஷயம் இருக்க வேண்டும் என்பது மட்டும் புரிந்தது...!
வினோதினி நீ ஒரு தோழி இல்லை என்று சொல்லாமல் சொன்னது மஞ்சுவின் மனதை காயப் படுத்தியது... மனோஜ் சொன்னதுப் போல இந்த விவகாரத்தில் தலை இடாமல் ஒதுங்கி இருந்திருக்க வேண்டுமோ???
வெகு தாமதமாக மனதுள் கேள்வி வந்தாலும், இனி ஆவது அதை செய்வது என்ற முடிவுக்கு வந்தாள்...
“வினோ, நான் இங்கேயே இறங்கிக்குறேன்... இங்கே இருந்து ஆட்டோ பிடிச்சு போயிடுறேன்...” என்றாள் மஞ்சு...
மஞ்சுவைப் போலவே வினோதினியும் இனி இவளுடன் பேசுவது வேஸ்ட் என்று முடிவெடுத்திருந்தாள் போலும்... அவளும் சரி என்று மட்டும் தலையை ஆட்டினாள்...
மஞ்சு ஆட்டோ டிரைவரிடம் சொல்லி வண்டியை நிறுத்தி இறங்கிக் கொண்டாள்!
அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வருவது மஞ்சுவிற்கு கடினமாக இல்லை... ஆனால் வினோவுடன் பேசியது கசப்பான உணவை மென்று விட்டதைப் போல அவளுக்குள்ளே விரும்பாத கசப்பு சுவையை பரவ செய்திருந்தது...!
நிர்மலாவிடம் வீட்டிற்கு சென்று சில நாட்கள் கழித்து மீண்டும் வருவதாக சொன்னப் போது நிர்மலா கேள்வி எதுவும் கேட்கவில்லை...
அம்மா வீட்டிற்கு வந்ததும் எக்ஸ்ட்ரா சுதந்திரம் வந்து விட்ட உணர்வு மஞ்சுவிற்கு வந்தது...
அம்மா, அப்பா, தங்கை என ஜாலியாகவே நேரத்தை செலவிட்டாள்... ஆனாலும் ஏனோ வினோதினியிடம் நடந்த உரையாடல் அவளின் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது!!!
அடுத்த நாள் காலை வேலையில் ஜாயின் செய்ய வேண்டும் என்பதால் அதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் இருக்க முயற்சி செய்தாள் மஞ்சு...!
தொடரும்...