“இல்லை சார்....நாங்க ரெண்டு பேரும் பழகியது எங்க வீட்டில் யாருக்குமே பிடிக்கலை சார்”
“ஏன்?...ஏன் பிடிக்கலை?”
“நான் ஊரிலேயே மிகவும் செல்வாக்கான....உயர்ந்த குடியில் பிறந்தவன் சார்!...ஆனா...முரளி...சாதாரண முடி திருத்தும் தொழிலாளியோட மகன் சார்!...”
“அதனாலென்னப்பா?...நட்பில் இந்த வித்தியாசமெல்லாம் பார்க்கக் கூடாதுப்பா”
“நான் பார்க்கலை சார்!...ஆனா பெரியவங்க பார்த்தாங்களே சார்!...”
“ஓ” என்றபடி மேவாயை நீவினார் தங்கவேலு.
“அதிலும்...எனக்கு நிச்சயம் செய்த பெண்ணோட குடும்பத்தார் ரொம்பவே பார்த்தாங்க சார்!...கடைசில...என் பெற்றோர்...எனக்குத் தெரியாம அவனை ரகசியமா சந்திச்சு... “உன்னால இந்தக் கல்யாணத்துல பிரச்சினை வந்து கல்யாணமே நின்னாலும் நின்னு போயிடும் போலிருக்கு!...அதனால நீ ஊரை விட்டே போயிடு”னு சொல்லி...அவனை குடும்பத்தோட ஊரை விட்டே துரத்திட்டாங்க சார்” சொல்லி விட்டு ஒரு பெண் பிள்ளை போல் வாய் விட்டு அழுதான் தனசேகர்.
சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்த தங்கவேலு, “ம்ம்ம்...உன் கல்யாணம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்ததல்ல?” தணிவான குரலில் கேட்டார்.
“முடிஞ்சுது...ஆனா....”என்று சொல்லி தனசேகர் இழுக்க,
“ஆனா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டார் தங்கவேலு.
“அந்தப் பொண்ணு என் வாழ்க்கைல வரணும் என்பதற்காக என் நண்பனைத் துரத்தினாங்கல்ல?...நான் அதை அப்படியே மாத்தி... “என் நண்பன் திரும்ப வர்ற வரைக்கும் அந்தப் பெண்ணுக்கு என் வாழ்க்கைல இடமில்லை!”ன்னு சொல்லி...தாலி கட்டுன கையோட அப்படியே அந்தப் பெண்ணை அவங்க பெற்றோர் கூட அனுப்பிட்டேன்!” வெற்றிப் புன்னகையோடு சொன்னான் தனசேகர்.
“என்னப்பா?...இப்படிப் பண்ணிட்டியே?...அந்தப் பொண்ணு வாழ்க்கைதானே அநியாயமா கெட்டுப் போச்சு?.” அங்கலாய்த்தார் தங்கவேலு.
“இல்லை சார்!...என் நண்பன் என் கூட திரும்பச் சேர்ந்ததும் நான் அந்தப் பெண்ணையும் சேர்த்துக்குவேன்!...” உறுதிபடச் சொன்னான் தனசேகர்.