இல்லை!...அந்தச் சின்னப் பிரிவும் இன்னும் கொஞ்சம் நேரத்துல சரியாயிடும்!...அதனால நீ கிளம்பிட்டே இரு!...உனக்கு இங்க வேலையில்லை!”என்றான் தனசேகர்.
“அதெப்படி வேலை இல்லாமல் போகும்?...நீதான் எவனோ ஈனசாதிப் பயல் “வந்தால்தான் எங்க பொண்ணைச் சேர்த்துக்குவேன்”னு சொன்னியாமா?...வந்திட்டானா அவன்?”
சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முரளியை அருகில் அழைத்த தனசேகர், “இவன்தான் என் நண்பன்...இவன் வந்திட்டான்...இன்னும் அரை மணி நேரத்துல என் மனைவியும் வந்திடுவா!...போதுமா?...கிளம்பு!..கிளம்பு!” என்று சொடுக்குப் போட்டு அந்த சொக்குவை விரட்டினான்.
அந்தச் சின்னப் பிரிவையே சாக்காய் வெச்சு மல்லிகாவை அடைந்து விடலாம், என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு வந்த சொக்கு, தன் கணக்கு தப்பாகிப் போனதில் கோபமுற்று, “இங்க பாரு...உனக்கு என்னைப் பற்றித் தெரியாது...ஏழு பேர் கையை வெட்டியிருக்கேன்...நாலு பேர் காலை வெட்டியிருக்கேன்!...ஜெயில் எனக்கு சத்திரம் மாதிரி...போவேன்...வருவேன்!...ஜெய்லர்களெல்லாம் எனக்கு மாமன் மச்சான் மாதிரி...அதனால...எனக்கு நீயெல்லாம் நவுத்துப் போன பிசுகோத்து மாதிரி..மரியாதையா என் மல்லிகாவை எனக்கே விட்டுக் குடுத்திட்டு...அப்படியே போயிடு...“மாமியார் வீடு...மாமனார் வீடு”ன்னு சொல்லிக்கிட்டு.....எங்காவது என் அக்கா வீட்டுப் பக்கம் வந்தே...?...மவனே கொடலை உருவிடுவேன்” கொக்கரித்தான்.
“எங்கே...கொடலை உருவு நான் பார்க்கிறேன்” என்று சொல்லியவாறே அந்த சொக்குவின் எதிரில் வந்து நின்றான் தனசேகர்.
சட்டென்று தன் இடுப்பிலிருந்த கத்தியை வெளியே எடுத்த சொக்கு, “டேய்...வேண்டாம்...என்னைத் தூண்டாதே...நான் யோசிக்க மாட்டேன்...ஒரே குத்தா குத்திடுவேன்” குதியாட்டம் போட்டான்.
“குத்துடா பார்க்கலாம்...உன் தைரியத்தை” தனசேகரும் உச்சஸ்தாயில் கத்தினான்.