ஆவேசமான அந்த சொக்கு தன்னிலை மறந்து தனசேகரின் வயிற்றில் கத்தியைப் பாய்ச்ச, பாய்ந்து வந்து தனசேகரைத் தள்ளி விட முயற்சித்தான் முரளி. ஆனால் அதற்குள் அந்தக் கத்தி தனசேகரின் வயிற்றினுள் ஆழப் புக, செங்குருதி கொப்பளித்து வெளியே வந்தது.
“அய்யோ..அம்மா”என்று கத்தியவாறே மண்ணில் விழுந்தான் தனசேகர்.
சில வினாடிகளில் அங்கு ஒரு ரத்தச் சேறு உருவானது.
வேலை செய்து கொண்டிருந்த பண்ணை ஆட்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வர, அதற்கு மேலும் அங்கே நின்றால் தன்னைப் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சொக்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனான்.
ரத்தச் சகதியில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த தனசேகரைக் கையால் வாரியெடுத்த முரளி, “தங்கவேலு...சார்...லாரியைக் கிளப்புங்க” கத்தலாய்ச் சொன்னான்.
அடுத்த நொடியே லாரிக்குள் பாய்ந்து சென்று ஸ்டார்ட் செய்தார் தங்கவேலு.
தொடரும்