தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 26 - பிந்து வினோத்
“ஜோதி இல்லாம வீடு எப்படியோ இருக்கு!” என்று நிர்மலா சொல்லவும், வினோதினியும், மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அதற்குள் தன்னை தானே சமாளித்துக் கொண்ட நிர்மலா,
“குழம்புல உப்பு இருக்கான்னு பார்க்க நினைச்சேன். மறந்துட்டேன்...” என்று சொல்லி சமையலறைக்கு சென்றாள்.
கார்த்திக் - ஜோதி திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. புது மணமக்கள் தேனிலவிற்கு சென்றிருந்தார்கள்.
ஜோதி கைக் குழந்தையாக இருந்த நாட்கள் முதலே அவளை தனி ஆளாக வளர்ந்திருந்த நிர்மலாவிற்கு அவளின் திருமணம் மகிழ்ச்சியை கொடுத்த அதே அளவிற்கு, பிரிவு வருத்தத்தையும் கொடுத்திருந்தது.
இதை நிர்மலா வாய் விட்டு வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அவளின் பேச்சின் வழியே அவளையும் அறியாமல் அந்த வருத்தம் வெளிப்பட தான் செய்தது.
வினோதினியும் மஞ்சுவும் அதை கவனிக்க தவறவில்லை.
இதைப் பற்றி அவர்கள் அவர்களுக்குள் முன்பே பேசி வைத்திருந்தார்கள்! எனவே இப்போது அதைப் பின்பற்றி, நிர்மலாவை தொடர்ந்து அவர்களும் கிச்சனுக்கு சென்றார்கள்,,
“அத்தை, நாங்க வந்த அன்னைக்கு ஒரு பெரிய கோலம் ஒன்னு போட்டு இருந்தீங்களே அது அழகா இருந்தது,” என்றாள் மஞ்சு.
“எந்த கோலத்தை சொல்ற? நிறைய பூவா இருந்ததே அதுவா?”
“அதே தான்னு நினைக்கிறேன்.”