வெங்காயத்தை நறுக்கி கொண்டிருந்த சத்யா, வேலையை தொடர்ந்தபடி,
"ஏன் கேட்குறீங்க?" என்று அங்கிருந்தே பதில் கேள்வி கேட்டாள்.
"காலையிலேருந்து டல்லா இருக்க. நேத்து நைட்டும் ஏதோ பயங்கர யோசனையில இருந்த?"
முன் தின இரவு வீடு திரும்பியதில் இருந்தே வேலையில் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தவன், இவ்வளவு கவனித்தானா?
சத்யாவிற்கு ஆச்சர்யத்துடன் மனதில் சந்தோஷமும் பொங்கியது! தென்றல்வாணன் எப்போதும் இப்படி தான்! அவளுக்கு அவன் பரிச்சயமான இந்த பத்து வருடங்களாகவே அப்படி தான்!
ஆனால் அவள் மனதை அலைகழித்துக் கொண்டிருக்கும் விஷயம் அவனிடம் சொல்ல கூடியதில்லை. எனவே,
"அதெல்லாம் ஒன்னுமில்லை, உங்களுக்கு என்னவோ அப்படி தோணுது!" என்றாள் சாதாரணமாக.
"நிஜமாவே எதுவும் இல்லையா?"
"இல்லை!"
"அப்போ சரி! இன்னைக்கு மார்கட் வேலையை நீ மேனேஜ் செய்துப்பல்ல?"
"ஹ்க்கும்! என்னவோ நீங்க தான் டெய்லி செய்ற மாதிரி! அந்த முத்துக்குமார் கேஸ் நடந்த நாள்ல இருந்தே நான் தான் மார்க்கெட் போறேன். இன்னைக்குன்னு இல்லை எப்போவுமே நானே இனிமேல் மேனேஜ் செய்துக்குறேன். நீங்க இந்த கேள்வியை பேருக்கு கேட்கனும்னு இல்லை! ஷாலினி ஸ்கூல் பக்கத்திலேயே சந்தை இருக்கு. நான் அவளை ஸ்கூல்ல இருந்து சாயந்திரம் அழைச்சிட்டு வரும் போது வேண்டியதை வாங்கிட்டு வந்திடுறேன்."