தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 41 - பிந்து வினோத்
மனோஜ் பத்தாவது முறையாக மஞ்சுவை தொடர்புக் கொள்ள முயன்றான். ஹுஹும், மஞ்சு அழைப்பை ஏற்கவே இல்லை!
அமுதா மற்றும் சரவணனுடன் திடீரென்று மஞ்சு முன் சென்று நின்றால் அவளுக்கு அதிர்ச்சியாக இருக்குமே என்று தான் மனைவியை போன் வழியாக தொடர்புக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தான்... ஆனால் மஞ்சு போனை எடுக்காமல் இருந்தாள்...
மனோஜ் காரின் ரியர் வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தான்... சரவணனின் கார் அவனின் காரை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பது தெரிந்தது...
அவர்களுக்காக தான் மனோஜும் மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான்... கூடவே, வீடு சென்று சேரும் முன் மஞ்சு ஒருத் தடவையாவது போனை எடுத்து விட மாட்டாளா என்ற எதிர்பார்ப்பும் கூட இருந்தது...
மீண்டும் ஒரு முறை போனை பார்த்து விட்டு சாலையில் கவனத்தை பதித்தான்.
மஞ்சு பற்றி சொன்னதும் அமுதாவிடம் வந்த ‘ரியாக்ஷன்’ நினைத்து அவனுக்கு இப்போதும் சிரிப்பு வந்தது... இன்னமும் அவனுக்கு மஞ்சு அமுதாவிடம் என்ன சொன்னாள் என்பது தெரியாது... ஆனால் மஞ்சு அவனுக்காக பேசி இருக்கிறாள் என்பது புரிந்தது... அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது... மொத்த விபரமும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் அவனுக்கு தோன்றவில்லை... அது தேவையும் இல்லை...
திருமணத்திற்குப் பின் மஞ்சு எத்தனை தடவை அவனுக்காக அவன் கேட்காமலே விட்டுக் கொடுத்திருக்கிறாள், அவனின் காரியங்களை அவளே எடுத்து செய்திருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றி அவனின் மனதை குளிர்ச்சி ஆக்கியது.. அதன் கூடவே அவன் அவளிடம் நடந்துக் கொண்ட விதம் நினைத்து வருத்தமாகவும் இருந்தது...!
இப்படி பல விதமான யோசனைகளுடன் அவர்கள் தங்கி இருந்த அபார்ட்மென்ட் வளாகத்திற்கு வந்து சேர்ந்தான் மனோஜ்...