பால்கோவா தயாரானதும் மஞ்சு அமுதாவிற்கு முதலில் எடுத்துக் கொடுத்தாள். பிறகு, மனோஜிற்கும், சரவணனுக்கும் கிண்ணங்களில் வைத்துக் கொடுத்தாள்.
“எனக்குப் புரியலை, மஞ்சு... அமுதா கோபம் எனக்கு தெரியும்... நாங்க வந்திருக்கோம்னு தெரிஞ்சு நீயும் அமுதா கிட்ட பேசலை... அப்புறம் எப்படி அமுதா வருவான்னு நினைச்ச???” சரவணன் மஞ்சுவிடம் கேட்டான்.
“எனக்குத் தெரியும் சரா... அமுதா என்னை பார்க்காம கிளம்ப மாட்டான்னு தெரியும்... மனோஜ் டின்னர்ன்னு சொல்லவே அதை வச்சு எட்டு மணி போல் வருவீங்கன்னு நினைச்சேன்...”
“அது தான் எப்படி???”
“டெலிபதின்னு வச்சுக்கோங்களேன்...” என்ற அமுதா, அப்படியே மஞ்சுவை மெல்ல அணைத்துக் கொண்டாள்...
“மஞ்சு சொல்றதும் சரி தான்... டின்னர் முடிஞ்சதும் ஏதாவது ரீசன் சொல்லி இங்கே விசிட் செய்யலாம்னு தான் இருந்தேன்...”
அமுதா சொன்னதை சரா’வும், மனோஜும் கேட்டார்களோ இல்லையோ, அமுதாவும், மஞ்சுவும் செல்லம் கொஞ்சிக் கொள்வதைப் பார்த்து இருவரின் காதுகளில் இருந்தும் புகை புகையாக வந்தது என்னவோ உண்மை...
“மனோஜ் என்ன உன்னை இப்படி பார்க்குறார்??? எப்படி இருந்த மனோஜை இப்படி மாத்தி வச்சிருக்க நீ???” என்று தோழியின் காதில் கிசுகிசுத்தாள் அமுதா!
“அவர் பரவாயில்லை... உங்களுக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் பிறந்தாச்சு... சரா வாயில கொசு போனாக் கூட தெரியாது போல இருக்கு...” என்று மஞ்சுவும் அதேக் குரலில் கிண்டல் செய்ய, அமுதா மெல்ல சிரித்தாள்...