"சொல்லுங்க சார்... என்ன விஷயம்? மது நல்லா தானே படிக்கிறாள்?" என்று விசாரித்தாள்.
"நான் தான் சொன்னேனே மது பத்தி பேச வரலைன்னு..."
"அப்போ... நீங்க இன்னும் காலேஜில நடந்த விஷயத்தை மறக்கலையா? அதைப் பத்தி பேச வந்தீங்களா?"
சற்றே ஆச்சர்யத்தோடு ஒலித்த பாரதியின் கேள்வியை கவனித்த விவேக்,
"நான் மறக்குறது இருக்கட்டும்... நீங்க மறந்துட்டீங்களா??" என்று அவளிடம் கேட்டான்.
ஆம் என்பது போல் தலை அசைத்த பாரதி,
"ஞாபகம் வச்சுக்குற மாதிரி அன்னைக்கு என்ன நடந்தது? மறக்க வேண்டிய விஷயங்கள் தானே நடந்தது...." என்றாள்.
அவளின் குரலில் மெலிதாக இழையோடிய கசப்பை உணர்ந்தவனாய், குரலை தணித்து,
"சாரி பாரதி...." என்றான் விவேக்.
வழக்கத்திற்கு மாறான அந்த தணிந்த குரலோ, அல்லது அதில் இருந்த கனிவோ, ஏதோ ஒன்று பாரதியை சற்று நேரம் வாயடைக்க செய்தது. ஆனால் உடனேயே தன்னை நிதானித்துக் கொண்டவளாய்,
"பரவாயில்லை சார்... ஏதோ கோபத்தில நடந்தது... அதைப் பத்தி திரும்ப ஏன் பேசனும்..." என்றாள்.
"இல்லை... பார்த்திபன் மேல கோபப் படாதீங்க... அவன் மேலே எந்த தப்பும் இல்லை... நான் தான் அவன் கிட்ட ஏதேதோ சொல்லி குழப்பிட்டேன்..."