தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 08 - பிந்து வினோத்
08. சொல்லாமல் என்னை எடுத்தாய்... பதிலாக உன்னைக் கொடுத்தாய்...
பாரதி எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், விவேக்கைப் பார்த்து ஒரு புன்னகையோடு,
“என் ஃபிரெண்ட் பவித்ராவும் உங்க அண்ணியும் அந்தப் பக்கம் போயிருக்காங்க, இப்போ வந்திருவாங்க...” என்றாள்.
ஒரு ஃபார்மாலிட்டிக்காக கேட்கிறான், அவள் பதில் சொன்ன உடன் போய் விடுவான், என மனதில் எண்ணியபடி பதில் சொன்னாள் பாரதி.
அவள் எண்ண ஓட்டம் புரியாதவனாக,
“ஓ! அப்போ அவங்க வரும் வரை நான் உங்களுக்கு கம்பெனி தரேன்.. உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்றபடி பவித்ரா அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்தான் விவேக்.
நீயாகவே உட்கார்ந்து விட்டு அப்புறம் என்ன ஒரு கேள்வி என மனதில் கேட்டு விட்டு, நேரில் ஒன்றுமில்லை என தலை ஆட்டினாள் பாரதி.
அடுத்து சில வினாடிகள் அமைதியில் கழிந்தது. பவித்ரா வருகிறாளா என பார்க்கும் தோரணையில் கண்களை வேறு பக்கம் அலைய விட்டாள் பாரதி. விவேக்கின் பார்வை அவளின் முகத்தில் தான் இருக்கிறது என்பது பார்க்காமலே புரிந்தது. பிடிக்கவில்லை என்று ஒரேடியாக சொல்ல முடியாவிட்டாலும், அவனின் இந்த நடத்தை அவளுக்கு சற்றே தடுமாற்றத்தை கொடுத்தது. இது என்ன வழக்கத்திற்கு மாறான தடுமாற்றம், என்று அவள் தன்னை தானே மனதில் திட்டிக் கொண்டிருந்த போது,
“நான் ஒன்னு சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே, பாரதி...” என்றான் விவேக் வித்தியாசமான குரலில்.
முன்பே கேட்டிருந்த அவனின் அந்த மிருதுவான தணிந்த குரலுக்கு பதிலாக என்ன என்பது போல் அவனைப் பார்த்தாள் பாரதி.