தோழியின் கிண்டலில் சற்றே செம்மையுற துவங்கிய முகத்துடன்,
“பவி, உனக்கு லேட்டஸ்ட் நியுஸ் தெரியாது. அதனால் தான் இப்படி எல்லாம் கிண்டல் பண்ணிட்டு இருக்க... விவேக்குக்கு ஏற்கனவே பொண்ணுப் பார்த்தாச்சு...” என்றாள் பாரதி.
தோழியின் முக மாற்றத்தை ரசித்து கொண்டிருந்த பவித்ராவிற்கு, அவள் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன பாரு சொல்ற? உனக்கு யார் சொன்னது? யாரு பொண்ணு?”
“விவேக் தான் சொன்னார்... நேத்து மது நம்மளை இன்வைட் செய்தப் போது ஒரு பொண்ணு இருந்தாளே, அவள் தான்... பேர் ஸ்ருதி...”
“ம்ம்ம்ம்... எனக்கு என்னவோ விவேக் சும்மா சொல்றாருன்னு தோணுது...”
“ஏன்???”
பாரதியின் அந்த சின்னக் கேள்வியில் கலந்திருந்த ஆர்வம் பவித்ராவிற்கு புரியாமல் இல்லை. அதை சொன்னால் பாரதி ஆம் என்று ஏற்றுக் கொள்ள போவதில்லை... அதனால், அதைக் கண்டு கொள்ளாது விடுத்து,
“உமா என்கிட்டே விவேக்குக்குப் பொண்ணுப் பார்த்துட்டு இருக்குறதா தான் சொன்னாங்க....” என்றாள்.
“மே பீ உமாக்கு லேட்டஸ்ட் நியூஸ் தெரியாதா இருக்கும்... எப்படி பார்த்தாலும் முடிவு செய்ய வேண்டியது விவேக் தானே?”
“ம்ம்ம்ம்.... அது என்னவோ சரி தான்...” சிந்தனையுடன் கண்களை சுழற்றிய பவித்ராவின் கண்களில், கொஞ்சம் தொலைவில் நின்றிருந்த ஸ்ருதியும், கற்பகமும் பட்டனர். அதே நேரத்தில் கற்பகமும் எதேச்சையாக இவர்கள் இருந்த பக்கம் பார்த்தாள்.
தொடரும்...