“அப்படி எல்லாம் எதுவும் இல்லை, பவி... விவேக் சார் கூட பேசிட்டு இருந்தேன்... வா நீயும் இங்கே உட்கார்... உமா எங்கே?”
“அவங்க கணவர் கூப்பிட்டார்ன்னு போனாங்க...” என்றபடி பாரதியின் அருகில் இருந்த காலி நாற்காலியில் அமர்ந்தாள் பவித்ரா.
“சரி, உங்க ரெண்டுப் பேருக்கும் நடுவில் நான் தடையா இருக்க விரும்பலை... நீங்க கண்டினியூ பண்ணுங்க... நான் கிளம்புறேன்...” என்றபடி நாற்காலியில் இருந்து எழுந்த விவேக், கிளம்பும் முன் பாரதியை மீண்டும் ஒரு முறை பார்த்து புன்னகைத்து விட்டுச் சென்றான்.
மற்ற நேரமாக இருந்தால் விவேக்கின் அந்த ஒரு வினாடி ‘எக்ஸ்ட்ரா’ பார்வையை பவித்ரா கவனித்திருப்பாளோ என்னவோ... ஆனால், உமாவின் மூலம் அறிந்துக் கொண்ட விஷயத்தின் காரணமாக விவேக்கை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவளின் பார்வைக்கு அவனின் அந்த பார்வை தப்பவில்லை.
விவேக் செல்லும் வரை காத்திருந்த பவித்ரா, அவன் சென்றதும்,
“என்ன பாரு, எனக்கு தெரியாமல் இங்கே என்னென்னவோ நடக்குது???” என்றாள் தோழியிடம்!
“எதை சொல்ற பவி?”
“வேற என்ன, நீ, விவேக்கைப் பார்க்க பிடிக்கலை பார்ட்டிக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டு இருந்த மாதிரி ஞாபகம்... இங்கே என்னடான்னா ரெண்டுப் பேரும் ரொம்ப மும்முரமா பேசிட்டே இருக்கீங்க... என்னப்பா விஷயம்???”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை பவி... சும்மா தான் பேசிட்டு இருந்தோம்...”
“சும்மா யார் கிட்டேயாவது பேசுற ஆளா நீ? என்கிட்டே கதை விடாதே... அதுவும் விவேக் கிட்ட சும்மா பேசினீயாக்கும்...!!! என்ன மேடம், என்ன விஷயம், உண்மையை சொல்...”