படங்கள், என அனைத்தையும் ரசித்த பவித்ரா, அவ்வப் போது உமாவிடம் தன் பாராட்டுக்களையும், கருத்துக்களையும் பகிர்ந்தபடி இருந்தாள்.
உமாவும், நீ என்ன சொல்வது என்று முகம் சுளிக்காமல், பவித்ராவின் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு, அவளின் கருத்துக்களைக் கேட்டு பதிலளிக்கவும் செய்தாள்.
வரவேற்பறையின் அருகில் இருந்த நீண்ட ஹாலின் ஒரு பகுதியில் நரேந்திரன் குடும்பத்தின் புகைப்படங்கள் இருப்பதைக் கண்ட பவித்ரா, அங்கே நின்று ஒவ்வொரு படத்தின் மீதும் தன் கண்களை ஓட விட்டாள்.
நிரஞ்சன், விவேக், மதுவின் சிறு வயது படங்கள் தொடங்கி, குழந்தை நித்யாவின் படம் வரை இருந்தது. திருமண கோலத்தில் இருந்த உமா நிரஞ்சன் படத்தைக் கண்டவள்,
“இன்னைக்கு இருக்க மாதிரியே தான் அந்த போட்டோலேயும் இருக்கீங்க... என்னங்க ரகசியம் உமா?” என்று உமாவிடம் கேட்டாள்.
“சும்மா தானே சொல்றீங்க, பவித்ரா? எனக்கே தெரியும், நான் கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்...”
“அப்படி எல்லாம் எதுவும் தெரியலை... உங்களுது அரேஞ்ச்ட் மேரேஜா, லவ் மேரேஜா?”
“அரேஞ்ச்ட் தான், என்ன இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்க...?”
“இல்லை, இந்த போட்டோல உங்க ரெண்டுப் பேரையும் பார்த்தால் லவ் மேரேஜ் போல தோணிச்சு...” என்றாள் பவித்ரா கேலியாக.
“ம்ம்ம்... நீங்க இப்படி எல்லாம் கூட பேசுவீங்களா?”
“மது உங்க கிட்ட சொன்னதை வச்சுக் கேட்குறீங்களா? அதெல்லாம் பசங்க முன்னாடி காட்டிக்குற இமேஜ்... நானும் பாரதியும் மத்த நேரம் எல்லாம் பேசுறதைக் கேட்டால் பயந்திடுவீங்க...” என்றாள் பவித்ரா விளையாட்டாக கண்களை உருட்டியப் படி...