இருந்தேன்... வாங்க அப்படிப் போய் உட்கார்ந்து பேசுவோம்..."
பாரதி சென்ற முறை அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிய பெஞ்ச் பக்கம் நோக்கி நடக்கவும், விவேக்கும் கூட நடந்தான்.
"நான் அப்போதே நினைச்சேன், நீங்க நிறைய கதைப் படிப்பீங்கன்னு. ஆனால் கதை எழுதவும் செய்வீங்களோ?"
அவனை ஆச்சர்யமாக பார்த்தவள்,
"ம்ம்ம்... முன்பெல்லாம் நிறைய எழுதுவேன், அது என்னவோ இப்போதெல்லாம் எழுத மனம் வரதில்லை..." என்றாள்.
"ஏன்?"
"ம்ம்ம்... தெரியலை, அது என்னவோ எழுத தோண மாட்டேங்குது..."
இருவரும் காலியாக இருந்த அந்த பெஞ்சில் அமர்ந்தார்கள்.
"அப்புறம், உங்க கனவு கம்பெனி எல்லாம் எப்படி இருக்கு?" என்று அக்கறையுடன் விசாரித்தாள் பாரதி.
"இன்னமும் கனவாகவே தான் இருக்கு," என்றான் விவேக், அவளை ஆச்சர்யமாக பார்த்து விட்டு!
"ஏன் அப்படி? காலம் தாழ்த்தும் ஒவ்வொரு வினாடியும், நீங்க பொன்னான நேரத்தை இழந்துட்டே இருக்கீங்க..."
"நிஜம் தான்! எனக்கும் சீக்கிரம் எனக்குப் பிடிச்ச பிசினஸ் ஆரம்பிக்க ஆசை தான்... ஆனால் நான் முன்பே உங்க கிட்ட சொன்னதுப் போல் அதில் கொஞ்சம் சிக்கல் இருக்குங்க.."