தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 14 - பிந்து வினோத்
14. எந்தன் உயிரே எந்தன் உயிரே... கண்கள் முழுதும் உந்தன் கனவே...
"சாரி விவேக், நான் சும்மா தான் சொன்னேன்..." என்றாள் பாரதி விவேக்கை சமாதானப் படுத்த விரும்புபவளாக...
"பொய் சொல்லாதீங்க... உங்க பேச்சுத் தோரணை எனக்குப் புரியும்..." என இப்போதும் கோபமாகவே பதில் சொன்னான் விவேக்.
இந்த முறை அவன் சொன்ன பதில், பாரதியின் கவனத்தை ஈர்த்தது... அது எப்படி இவனுக்கு அவளின் பேச்சுத் தோரணை தெரியும்??? மனதில் எழுந்த கேள்வியை மறைக்காது விவேக்கைப் பார்த்தாள். பாரதியின் விழிகளில் பிரதிபலித்த கேள்வி புரிந்தும், பதில் சொல்லாது அமைதியாக அவளின் பார்வையை சந்தித்தான் விவேக். சில வினாடிகளில் பார்வையை திருப்பி கொண்ட பாரதி, அமைதியாக இருந்தாள். அவளையே பார்த்த படி அமர்ந்திருந்த விவேக்கிற்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாது,
"சரி பாரதி, இதுக்கு மேல் நான் உங்க நேரத்தை வீணாக்குவது சரி இல்லை..." என்றான்.
"அப்படி எல்லாம் இல்லை, விவேக்... ம்ம்ம்... உங்களுக்கு கோபமா???"
கடைசி கேள்வியை கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனே கேட்டாள் பாரதி...
விவேக்கிற்கு இதுவும் புரிந்தது!!! இப்போதும், அதை புரிந்துக் கொண்டதாக காட்டிக் கொள்ளாமல்,
"ஆமாம்னு சொன்னால் என்ன செய்வீங்க?" என்று அவளிடம் கேட்டான்!
"வேற என்ன செய்ய முடியும்? சாரி சொல்வேன்..."
"அப்போ கோபம் இல்லைன்னு வச்சுக்கோங்க... உங்க சாரியை, நீங்களே உங்க கிட்டப் பத்திரமா வச்சுக்கோங்க..."
"இப்படி சொன்னால் எப்படி...???"