மூச்சைப் பிடித்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்!
விவேக் போனை எடுத்துப் பேசுவானா என்று சான்விக்குத் தெரியவில்லை. ஹரிணியை தான் அவள் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். முதலில் சான்வியே அப்படி தான் நினைத்தாள். ஹரிணியால் அக்ஷ்ராவின் மனதை மாற்ற முடியுமா என்ற கேள்வி வந்ததும் சான்வி நிதானித்தாள். இப்போதைய நிலைமையில் உதவக் கூடியவன் விவேக் மட்டுமே! அவன் நினைத்தால் அக்ஷ்ராவை இளக வைக்க முடியும். ஆதித்யா சொன்னவற்றை வைத்துப் பார்த்தாலும் சான்வியால் அந்த முடிவிற்கு தான் வர முடிந்தது!
இதுவரை விவேக் பேசிய நேரங்களில் அதிக ஆர்வமில்லாமல் பேசி விட்டு இப்போது அவளுக்கு ஒருத் தேவை என்றதும் அவளே அவனை அழைத்துப் பேசுவது சான்விக்கு எப்படியோ இருந்தது. எப்படியோ என்ன, சுயநலமாக தெரிந்தது. விவேக்கும் அப்படி தான் நினைப்பானோ, அதை நேராக கேட்டு விடுவானோ என பல ரகமான கேள்விகள் சான்வியை வறுத்து எடுத்தது.
அதை எல்லாம் சமாளித்து விவேக்கை அழைத்து விட்டாள். விவேக் பேசுவானா?
சான்வி படபடக்கும் இதயத்துடன் காத்திருக்க, அவளின் போன் நீண்ட நேரம் ரிங்காகி இறுதியில் மௌனம் ஆகிப் போனது.
சான்விக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. அக்ஷரா போன் எடுக்காமல் இருப்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். விவேக்கும் இப்படி செய்தால் என்ன சொல்வது? ஆதித்யா கிளம்பி வந்த விதம் விவேக்கிற்கும் பிடிக்கவில்லையோ என்னவோ!
இனி என்ன செய்வது? ஹரிணியிடம் தான் பேச வேண்டும்!
உடனடியாக ஹரிணியை அழைத்துப் பேச சான்விக்கு மனம் வரவில்லை. போனை கீழே வைத்து விட்டு அமர்ந்திருந்தாள்.