காஞ்சனா ஆச்சர்யத்தில் பேச்சிழந்து இருக்க, கீதா பேசினாள்.
"இந்த விஷயத்தில் என்னை விட அத்தை தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும், சஞ்சீவ்... இந்த வீட்டிலேயும் தோட்டத்திலேயும் ஒவ்வொன்னையும் எப்படி கவனமா பார்த்து பார்த்து செஞ்சுருக்காங்க பார்த்தீங்க இல்லை... அந்த லேயவுட்ட அத்தைக் கிட்ட கொடுங்க அவங்க நல்ல சூப்பரா ஐடியாஸ் கொடுப்பாங்க....."
சஞ்சீவ் சந்தோஷத்துடன் தலை அசைத்துவிட்டு வரைபடத்தை எடுக்க மாடிக்கு சென்றான். கீதா இரவு உணவு தயார் செய்வதாக சொல்லி விட்டு சமையல் அறை சென்றாள். காஞ்சனாவிடம் வரைபடத்தை கொடுத்து விட்டு, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் அளித்து விட்டு, அண்ணியை பார்க்க சமையல் அறைக்கே வந்தான் சஞ்சீவ்.
"என்ன அண்ணி, கலா எங்கே? நீங்க மட்டும் தனியா சமையல் செஞ்சுட்டு இருக்கீங்க? அண்ணா பார்த்தால் அவ்வளவு தான் ரத்தக் கண்ணீர் வடிப்பான்... "
"கலாக்கு நாளைக்கு காலையில ஒரு இண்டர்வியு இருக்கு. அதனால நான் தான் போய் ப்ரிபேர் பண்ண சொன்னேன்.... அப்புறம் என்ன சஞ்சீவ், உங்க கிளாஸ் எல்லாம் எப்படி போச்சு?" சப்பாத்தி சுட்டப்படி கேட்டாள் கீதா.
"என்ன அண்ணி... நானே போதி மரத்துக்கு கீழே உட்கார்ந்து எழுந்து வந்த மாதிரி பேசிட்டு இருக்கேன்.. அதிலேயே உங்களுக்குப் புரிஞ்சிருக்கனுமே..."
"ஓரளவுக்குப் புரியுது... இருந்தாலும்... அப்படி என்ன இந்து உங்க கிட்ட புதுசா சொன்னாள்?"
"உங்க ஃபிரென்ட் நிறைய எல்லாம் பேசலை.. ஷார்ட் அண்ட் சிம்பிளா முடிச்சுட்டாங்க... என்ன பிசினஸ் செஞ்சாலும் அதை தெரிஞ்சு செய்யனும்னு சொன்னாங்க.. ஆர்வத்தோட எடுத்து செய்யனும்னு சொன்னாங்க...."
"ஓஹோ! இதை எல்லாம் வேற யாரும் உங்க கிட்ட சொல்லலையா என்ன?" என்றாள் கீதா கிண்டலாக.