"ஓஹோ!" என்ற கீதா... அப்படியா விஷயம் என்று மனதுள் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
"சரி, ரொம்ப நல்லா பேசுறாங்கன்னு சாதாரணமா ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்ன்னு ஹான்ட் ஷேக் செய்யலாம்னு அவங்க கையைப் பிடிச்சா, மூஞ்சில அடிக்கிற மாதிரி பட்டுன்னு கையை இழுத்துக்கிட்டாங்க... சரி தான் இவங்க பார்க்க தான் மாடர்ன் மத்த படி நம்ம கலாச்சாரத்தை இம்மி பிசகாமல் follow பண்ணுவாங்க போல இருக்குன்னு நினைச்சால்... அந்த பிரசாத் கிட்ட மட்டும் ரொம்ப சாதாரணமா ஹாய் சொல்லி கை க்குலுக்குறாங்க... என்னை பத்தி அவங்களுக்கு ஏதோ தப்பா அபிப்ராயம் இருக்குமோ என்னவோ?"
கீதாவிற்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக அவள் அறிந்த வரை இந்து இது போல் இல்லை. அவள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு நேர்த்தி, அழகு, கம்பீரம் இருக்கும், ஆங்கிலத்தில் சொன்னால் elegant touch இருக்கும். இது போல் நட்பாக கையை குலுக்கினால் கையை இழுத்துக் கொள்வது இந்துவின் குணாதிசயம் இல்லை. அதுவும் அவள் ஒன்றும் ஆண்கள் என்றால் ஒதுங்கிக் கொள்ளும் பெண்ணும் அல்ல. ராஜீவ் கீதாவிற்கு அறிமுகம் ஆனதே இந்துவின் மூலம் தான். ராஜீவும், இந்துவும் நட்புடன் பழகுவதைப் பார்த்து ஆரம்பத்தில் கீதாவே குழப்பமும் அடைந்து இருக்கிறாள். தன் சிந்தனையை அப்போதைக்கு ஒதுக்கி விட்டு, சஞ்சீவை நோக்கி,
"ஒரு நாள் பழக்கதில நீங்க இப்படி உரிமையா கையை எடுத்து handshake பண்ணுவீங்கன்னு இந்து எதிர்பார்த்திருக்க மாட்டாள்... பிரசாத் அவளுக்கு பிசினஸ் சைட்ல நல்லா தெரிஞ்சவர்... அதனாலேயா இருக்கும்... ஆனால், இந்து உங்ககிட்ட இதுக்கும் மன்னிப்பு கேட்கலையா என்ன??"
"கேட்காமல் என்ன.... உடனேயே சாரி சொன்னாங்க.. ஆனால் நீங்க நான் ஏன் அவங்களுக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு கேட்கவே இல்லையே?"
"நான் கேட்கலைனாலும் நீங்க சொல்ல மாட்டீங்களா என்ன? சரி பரவாயில்லை நானே கேட்கிறேன், ஏன்?"