இந்துவின் அலுவலகத்தில் ஏற்பட்ட குளறுபடி, வீணாவின் கிண்டல், இந்துவின் அமைதி, சஞ்சீவிற்கு இந்துவை சந்திக்க இருந்த ஆர்வம், இருவருடைய சந்திப்பு என்று தான் அறிந்தவற்றை கீதா அப்படியே கணவனிடம் ஒப்பித்தாள். அவள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ராஜீவ்,
"சரி, இதில் நீ எங்கே சம்பந்தப்பட்டு இருக்கிற? முதல் நாள் நீ இல்லாத போது தானே அவங்க மீட் பண்ணினாங்க?. அப்புறம் இந்த பிசினஸ் விஷயம் கூட நீ வேண்டாம்ன்னு சொல்ல சொல்ல அம்மா தானே சஞ்சீவை போக சொன்னாங்க?" என்றான்.
"அதெல்லாம் சரி தான், ராஜ், ஆனால் அத்தைக்கு எப்படி இது எல்லாம் தெரியும்? விஷயம் தெரியும் போது, எனக்கு தெரிஞ்சு இருந்தும் நான் எதுவும் சொல்லலைன்னு தானே நினைப்பாங்க?"
"ம்ம்ம்... யோசிக்க வேண்டிய விஷயம் தான்.... ஆனாலும் என்ன கண்ணம்மா, அம்மாக்கு உன் மேல் பிரியம் ஜாஸ்தி, நாம எடுத்து சொன்னால் போச்சு...."
"எனக்கு என்னவோ இந்து - சஞ்சீவ் பற்றி மட்டும் இல்லை, நம்மளை பத்தியும் கவலையா இருக்கு ராஜ்..."
"நீ தேவை இல்லாமல் கவலைப் படுற, டார்லிங்...."
"இல்லை... அப்படி ஒரு பிரச்சனை வந்தால் நீங்க என்ன செய்வீங்க சொல்லுங்க?" என்றாள் கீதா சிறிது அழுத்தத்துடன்.
அவளை சிந்தனையோடு நோக்கிய ராஜீவ்,
"அதாவது, அப்படி ஒரு நிலைமை வந்தால், நான் உன்னை விட்டு விட்டு அம்மா பக்கம் சாய்ந்து விடுவேனொன்னு உனக்கு பயம்?" என்றான் வித்தியாசமான குரலில்!
தொடரும்...